ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் நேர்காணல் அறிவிப்பு...
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்திட வேண்டும் என இன்று (22/06/2022) தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை / மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான நேர்காணல் நடைபெறாத நிலையில் தற்போது அரசாணை நிலை எண்.136 நிதி (ஓய்வூதியம்)த் துறை நாள் 20.05.2022-ன் படி, ஓய்வூதியர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப பின்வரும் ஏதேனும் ஒரு முறையை பின்பற்றி இவ்வாண்டிற்கான (2022-23) நேர்காணல் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1) ஜீவன் பிரமான் இணையதள மின்னணு வாழ்நாள் சான்றிதழ்
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக ஓய்வூதியர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு சேவை முறையை பின்பற்றி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அ) இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70/- கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
ஆ) அரசு இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
இ) ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி (Biometric Device) பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆணி நேர்காணல் செய்யலாம்.
மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள் ஆதார் எண், P.P.O.No., வங்கி கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகிய முக்கிய விவரங்களை அளிக்க வேண்டும்.
2) வாழ்நாள் சான்றிதழ் படிவத்தினை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் அனுப்புதல்
ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றினை (Life Certificate) (www.tn.gov.in/karuvoolam/) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட ஏதேனும் ஒரு அலுவலரிடம் கையொப்பம் வெற்று தபால் மூலமாக தொடர்புடைய கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர் (அல்லது) அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது) வட்டாட்சியர் / துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் சான்றொப்பம் பெற்று அனுப்பவேண்டும்
வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் மேற்கண்ட இணையதள முகவரியிலிருந்து வாழ்வு சான்றிதழை பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக அலுவலர் / மாஜிஸ்ரேட் / நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் வாழ்வுநாள் சான்று (Life Certificate) பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம்.
மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின் படி நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணலில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் தொடர்புடைய மாவட்டக் கருவூல அலுவலர் / மண்டல இணை இயக்குநர் அல்லது சென்னை கருவூல கணக்குத்துறை ஆணையரகத்திற்கு “கருவூல கணக்குத்துறை ஆணையரகம், பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை, 3வது தளம், நந்தனம் சென்னை-600 035, மின்னஞ்சல் dta.tn@nic.in, தொலைபேசி எண் 044-24321761, 044-24321765, 044-24321765” என்ற முகவரி / தொலைபேசி / மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments