பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கிப் பயில உடனே விண்ணப்பிக்கலாம்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பம் செய்யலாம் (2022-2023) என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவ / மாணவியர்களுக்கென 16 விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி விடுதிகள் 11 விடுதிகள் மாணவர்கள் விடுதியும், 5 மாணவியர்கள் விடுதியும் செயல்படுகின்றன. இதில் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி விடுதிகள் உள்ளன.
பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ /மாணவியர்களும், அதற்குமேல் படிக்கும் மாணவ/மாணவியர்களுக்கு கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் விடுதிகளில் சேர தகுதியுடையவர்கள் ஆவர். அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ /மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
அனைத்து விடுதி மாணவ/மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளானது, பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2.00 இலசட்த்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கீ.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.
தகுதியுடைய மாணவ/மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரி மற்றும் பள்ளி விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் வருகின்ற 30.11.2021 க்குள்ளும் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை 31.07.2022க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவ/மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிப் பயிலவும் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே மாணவ / மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments