Breaking News

வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து நேரில் ஆய்வு

ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை காகர்லா உஷா, ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று (06.06.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை காகர்லா உஷா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், இணைய வழியில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை காகர்லா உஷா தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 30.5.2022 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடிநீர் இணைப்பு, கட்டட அனுமதிகள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சொத்துவரி பெயர் மாற்றம் போன்ற பொதுமக்களுக்கான சேவைகளை தாமதமின்றி விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டதோடு, குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளும் போது தோண்டப்படும் சாலைகளை மீண்டும் பழைய நிலையிலேயே இருக்கும்படி உடனடியாக சீர்செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்கள். அந்த வகையில், இன்று (06.06.2022)  ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அவர்கள் பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில், இணைய வழியில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய இரண்டு கோட்டங்களிலும் வழங்கப்படும் சான்றிதழ்களை எவ்வித நிலுவையுமின்றி வழங்கவும், மேலும், நிலுவையில் உள்ள சான்றிதழ்களை உடனடியாக வழங்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

மேலும், நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் மற்றும் பட்டாமாறுதல் விண்ணப்பங்களின் விபரங்கள் குறித்து அனைத்து வட்டாட்சியர்களிடமும் கேட்டறிந்தார். நிலுவைக்கான காரணங்களை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து, இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களை பெற்று, சான்றிதழ்கள் மற்றும் பட்டாக்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ் கோரி பதிவு செய்யவும், ஏற்கனவே பதிவு செய்து சான்றிதழ் பெறவும் வந்திருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 06.06.2022 முதல் 10.06.2022 வரை ஐந்து நாட்கள் வட்டார அளவிலான பயிற்சி நடைபெறுவதையொட்டி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இப்பயிற்சியானது, மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதாக அமைய வேண்டும் என்றும், பயிற்சியில் பங்குபெற்றுள்ள ஆசிரியர்கள் அதனை ஆர்வத்துடன் கற்று, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா, கோட்டாட்சியர்கள் மா.சதீஷ்குமார் (ஈரோடு), செல்வி.திவ்ய பிரியதர்ஷினி (கோபி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, முதன்மை கல்வி அலுவலர் இராமகிருஷ்ணன், பெருந்துறை வட்டாட்சியர் குமரேசன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments