Breaking News

கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தின் ஏரிக்கரையில் 2 கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகேயுள்ள கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தின் ஏரிக்கரையில் பழமை வாய்ந்த பீமேஷ்வரர் திருக்கோவில் உள்ளது. இது சிதிலமைடைந்து காணப்பட்டது.  இவ்வாலயத்தை புதுப்பித்து சீரமைக்க கிராமத்தினர் முடிவு செய்து பணிகள் தொடங்கப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளது. 

திருப்பணிக் குழுவைச் சேர்ந்த தொழிலதிபர் MDM இராஜேந்திரன் மற்றும் சுரேஷ் ஆகியோர் அளித்த தகவலைத் தொடர்ந்து வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் அவர்கள் தலைமையில் ஆய்வு செய்ததில் அங்கு 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

முதல் கல்வெட்டு 

ஆலயத்தின் கருவறைக்கு நேர் எதிரே லிங்கத் திருமேணியை வணங்கும் விதத்தில் ஆண் பெண் உருவம் கொண்ட புடைப்பு சிற்பமும்  இந்த உருவங்களின் தலைக்கு மேலே 4 வரிகளும், பாதத்திற்கு கீழே 8 வரிகளுமாக மொத்தம் 12 வரிகள் கொண்ட கல்வெட்டும் ஒரே கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.  


முதல் சில வரிகள் சிதைவு ஏற்பட்டுள்ளது.  எஞ்சிய வரிகள் மூலம் கொத்தம் வெங்கப்ப செட்டி கொநெரி செட்டி என்பவர் செய்த உபயம் என அறிய முடிகிறது. இதில் காணப்படும் சிற்பங்களான பெண்ணின் தலையில் ,இடப்பக்கம் கொண்டை, காதுகளில் அணிகலன்களும், கழுத்தில் சரப்பள்ளி ஆபரணம், கைகளில் மணிக்கட்டில் காப்புகளும், புஜங்களில் வளையங்களும், இரு கைகளை கூப்பிய நிலையிலும், இடுப்பில்  நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய பெண் ஆடை ஆகியன செதுக்கப்பட்டுள்ளன. 


ஆண் உருவத்தில் நெற்றிப் பட்டையில் மணிகளுடன் கூடிய ஆபரணம், காதில் கடுக்கண், கழுத்தை ஒட்டிய நிலையில் ஆபரணமும், கழுத்திலிருந்து மார்பு வரை அழகிய வேலைப்பாடுகளுடன் ஒரு ஆபரணமும், வளையங்களுடன் கூடிய இரு கைகள் கூப்பியவா-றும், இடுப்பில் முடிச்சுகளுடன் கூடிய ஆடை கால்கள் வரை நீண்டுள்ளது 

2வது கல்வெட்டு

இரண்டாவது கல்வெட்டு கோயில் நுழைவாயிலின் வலப்புறம் உள்ள சுவற்றில் உள்ளது.  இது பலமுறை வண்ணம் தீட்டப்பட்டு மறைந்து இருந்ததை ஆய்வு மையத் தலைவர் அஜய்குமார் அவர்கள் கண்டுபிடித்து சுத்தம் செய்தபின் அதிலும் ஒரு தமிழ்க்  கல்வெட்டு இருப்பது உறுதியானது.  

இவ்விறைவனின் பெயர் தற்போது பீமேஷ்வரர் என அழைக்கப்படுகிறது.  ஆனால் கல்வெட்டின் படி விமுனாதசுவாமி என அறியமுடிகிறது.  இதில் விளம்பி வருடம் சித்திரை மாதம் ராசாம்பேட்டை ஆயிரங்காத்தான் என்பவர் இக்கோயிலுக்கு செய்த தானத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேற்கண்ட இரு கல்வெட்டுத் தகவல்களை  தொல்லியல் துறையை சேர்ந்த உதவி கல்வெட்டாய்வாளர்  பா.த.நாகராஜன், 

உதவி தொல்லியல் ஆய்வாளர் இரமேஷ் ஆகியோரும் ஆய்வு செய்து உறுதிப் படுத்தியுள்ளனர். மேலும் இக்களப் பணியின்போது ஆய்வு மையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நிர்மல்குமார், சஞ்சய் ஆகியோரும் உடனிருந்தனர். 

 சமீப காலமாக பழம்பெருமை வாய்ந்த கோயில்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்களால் பெருமளவில் புணரமைக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அமைக்கப்படும் போது அறியாமை காரணமாக கல்வெட்டுக்கள் மீது வண்ணம் தீட்டுவது, கல்வெட்டு அமைந்துள்ள கற்களை இடம் மாற்றி அல்லது வரிசை மாற்றி கட்டுவது உள்ளிட்ட செயல்கள் அதிகளவில் நடைபெறுகிறது.  இதை தடுக்கும் வகையில் இந்து அறநிலையத்துறை, தொல்லியல் துறை மற்றும் கட்டுமான தொழிலாளார் நலத்துறையினர் இணைந்து வரலாற்று சான்றுகளாக விளங்கும் இந்த அரிய பொக்கிஷங்களை எப்படி பாதுகாப்பது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் கேட்டுக்கொண்டார்.

தொடர்புக்கு

மா.த. அஜய்குமார்,

வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையம்,

காஞ்சிபுரம் மாவட்டம்

8270020800

No comments

Thank you for your comments