நத்தாநல்லூரில் அரிய வகை ஜேஷ்டா தேவி சிலை
வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லூர் கிராமத்தில் பல்லவர் கால வித்தியாசமான ஜேஷ்டா தேவி சிலை வழிபாட்டில் இருப்பதை வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத் தலைவர் அஜய்குமார் கண்டுபிடித்துள்ளார்.
தாய் தெய்வ வழிபாட்டில் ஜேஷ்டா தேவி எனப்படும் தவ்வை வழிபாடு தமிழகத்தில் தொன்றுதொட்டு மரபில் இருந்து வந்துள்ளது. இவ்வழிபாடு பல்லவர் காலத்தில் உச்சத்தில் இருந்துள்ளது. சோழர் காலத்திலும் கோயில்களின் தென்மேற்கு பகுதியில் அமைத்து வழிபாடு நடத்தி வந்துள்ளனர். நந்தி வர்மப் பல்லவனின் குலதெய்வமாகவும் தவ்வை இருந்துள்ளது.
தவ்வை தெய்வத்துடன் மகன் மாந்தன் மாட்டுத்தலையுடனும், மகள் மாந்தி உருவங்களும், காகத்தை கொடியாகவும் கழுதை வாகனத்தையும், தூய்மையின் அடையாளமாக துடைப்பத்தையும் கொண்டும், செல்வ வளத்தைக் குறிக்கும் விதமாக பருத்த உடலுடன் தான் பொதுவாக தவ்வை சிலைகள் காணப்படுகின்றன.
ஆனால் நத்தாநல்லூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த தெய்வ சிலையானது சற்று வித்தியாசமாக சிறுத்த இடையுடன் மெலிந்த தேகத்தோடு அமைக்கப்பட்டுள்ளது. வலது புறத்தின் மேல் பகுதியில் ஜேஷ்டாவின் மகன் மாந்தனின் உருவமும், கீழ்ப் பகுதியில் மாந்தியின் உருவமும் உள்ளது. இடது புறத்தின் மேல் பகுதியில் ஜேஷ்டா தெய்வத்திற்கே உரிய காக்கைக் கொடியும், கீழ்ப்பகுதியில் பணிப்பெண் உருவமும் உள்ளது.
உருவ அமைப்புக்களை வைத்து இது சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் காலத்தைச் சேர்ந்த சிலை என உதவி கல்வெட்டாய்வாளர் திரு நாகராஜன் , தொல்லியல் துறை உதவி ஆய்வாளர் திரு இரமேஷ் அவர்களும் தெரிவிக்கின்றனர்
பூமாதேவிக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். முதல் மகள் மூத்த தேவி, இரண்டாவது மகள் சிறிய தேவி அதாவது இளையவள் ஸ்ரீதேவி என அழைக்கப்படுகிறாள். மூத்த தேவியே நாளடைவில் மூதேவி என ஆயிற்று. மூத்த தேவியான தவ்வைக்கு, ஜேஷ்டா தேவி, சேட்டா தேவி, சேட்டை, மாமுகடி, பழையோள், காக்கை கொடியாள், ஏகவேணி என பல பெயர்களில் அழைக்கப்பட்டார். ஜேஷ்டா என்றால் சமஸ்கிருத்தில் முதல் என்று பொருள்படும். சேட் என்றால் தமிழில் பெரிய என பொருள்படும்.
கொற்றவைக்கு அடுத்தபடியாக சங்க இலக்கியங்களில் அதிகமாக பாடப்பட்ட தெய்வம் மூதேவி என்கின்ற தவ்வை தெய்வமாகும். திருவள்ளுவர், அவ்வையார், கம்பர் போன்ற புலவர்களும் தவ்வையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
உரத்தின் அடையாளம் மூத்த தேவி. நெற்கதிர் இன் அடையாளம் திருமகள் அல்லது லட்சுமி என்று அழைக்கப்பட்டாள். தவ்வை சிலைகள் பெரும்பாலும் வயல் சார்ந்த பகுதிகளிலும் நீர்நிலை சார்ந்த பகுதிகளிலும் காணப்படுகிறது.
ஆதி தமிழனின் உரத்திற்குப் பின் செழிப்பு என்ற அரிய தத்துவத்தின் வெளிப்பாடே இந்த வழிபாடு. உடலுக்கு நோய் நொடி, சோம்பல் இல்லாமல் உழைக்கும் வலிமை, செல்வம் ஆகியன வேண்டி இந்த தெய்வத்தை வணங்கினார்கள்.
இப்போது அழுக்கு தேவியாக கருதப்பட்டு வருகிறார். ஆனால் அழுக்கு என்பது வயலுக்கு தேவைப்படும் உரத்தின் மூல வடிவமான மனிதன், கால்நடைகள் மற்றும் தாவரங்களின் கழிவை குறிப்பதாகும். அழுக்கு என்ற சொல் அழுகச் செய்யப்படுதல் என்று குறிக்கும்.
இக்கள ஆய்வில் ஊராட்சி மன்ற தலைவர் திரு மணி அவர்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர் என அஜய்குமார் தெரிவித்தார்
மா. த. அஜய்குமார்,
தலைவர், வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையம்.
செல் 8270020800
No comments
Thank you for your comments