Breaking News

இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள் அறிவிப்பு - விண்ணப்பிக்க கடை தேதி 10-05-2022

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளில் மாவட்ட/மாநில அளவிலான  கலைப்போட்டிகள்  தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.

குரலிசைப் போட்டி மற்றும் கருவியிசைகளான நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்யம், மாண்டலின், கிதார், ஹார்மோனியம், கீபோர்ட் சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசைப்பேட்டியிலும்   வர்ணங்கள் தமிழ்பாடல்கள்  இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம்.

தாளக்கருவிகளான  தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் சில தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில்   வர்ணம்   மற்றும்  தமிழ்  பாடல்கள்  நிகழ்த்தும்  நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.



கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைச்சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். இப்போட்டியில் குழுவாக பங்கு பெற அனுமதியில்லை.  தனிநபராக  அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.



ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவியத் தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும், இதனை பங்கேற்பாளர்கள் கொண்டு வர வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும் அதிக பட்சம் 3  மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள்.

மாவட்ட போட்டியில் முதலிடம் பெறுவோர் மாநில அளவிலான போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டிகளில் பங்கு பெற விரும்பும் இளைஞர்கள் மே 10 ஆம் தேதிக்குள் மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை , சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் – 631 502  என்ற முகவரிக்கு  தங்களது பெயர், பிறந்த நாள் , முகவரி, செல்பேசி எண் , பங்கு பெற விரும்பும் கலை பிரிவு ஆகிய விவரங்களை அனுப்பலாம் அல்லது 91 5008 5001 என்ற செல்பேசி எண்ணிற்கு வாட்ஸ் அப்பிலும் அனுப்பலாம்.  இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க  காஞ்சிபுரம்  மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர், டாக்டர். மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments