காஞ்சிபுரம் பொன்னேரி மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
காஞ்சிபுரம், ஏப்.07:
காஞ்சிபுரம் பொன்னேரி கரையில் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளான ரயில்வே மேம்பாலத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று காலையில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை, ஸ்ரீபெரும்புதூர், பரந்தூர், சுங்குவார்சத்திரம் என, சென்னை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும், காஞ்சிபுரம் பொன்னேரி கரையிலுள்ள புதிய ரயில்வே நிலையத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
ரயில்வே கிராசிங் இருப்பதால், ஒரு நாளைக்கு, 20 முறைக்கும் மேலாக, ரயில் வரும் நேரத்தில், வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால், பயணி யருக்கு குறித்த நேரத்தில் வெளியூர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.
பல ஆண்டுகளாக இருந்த இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கடந்த அதிமுக அரசு, 2017ல், 50 கோடி ரூபாய் மதிப்பில், புதிய ரயில்வே மேம்பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டது.
முதலில் வேகமாக நடந்த நிலையில், ரயில் கடக்கும் பகுதியில் கட்ட வேண்டிய பாலப் பணிகள் தொய்வடைந்தன . மேலும், ரயில்வே பங்குக்கு, பல ஆண்டுகளாக பணிகளை சுணக்கமாக மேற்கொண்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டிய இப்பாள பணிகளை, ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தனர். ஒருவழியாக, பால கட்டுமானத்தை முடித்தனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், இன்று காலை 9.30 மணிக்கு பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர்,காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுரு நாதன், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார்,மாவட்ட ஊராட்சி குழ துணை தலைவர் நித்யா சுகுமார், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார்,கோனேரிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சைலஜா சேகர், மாநகராட்சி ஆணையர் நாராயணன்,நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி சுகுமார், ஒன்றிய கவுன்சிலர் ராம் பிரசாத்,மாமன்ற உறுப்பினர்கள் செவிலிமேடு மோகன், சாந்தி சீனிவாசன், கார்த்தி, சசிகலா, கமலக்கண்ணன், இலக்கியா சுகுமார், நிர்மலா, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments