தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவ-மாணவியர்களுக்கு நிதியுதவி
வேலூர், ஏப்.7-
தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவ-மாணவியர்களுக்கு அவர்களின் படிப்பினைத் தொடர, முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து, நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் மிகவும் வறியநிலையில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 200 மாணவ-மாணவியர்களுக்கு அவர்கள் படிக்கும் காலத்தில் ஏதாவது ஒரு ஆண்டில் ஒருமுறை மட்டும் தலா ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) கீழ்காணும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அரசால் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து நிதியுதவி பெற கீழ்கண்டவாறு தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1. அரசின் முகமையினால் நடத்தப்படும் ஒற்றைச் சாளரமுறை வழியாக சேர்க்கை பெறவேண்டும்.
2. தமிழ்நாட்டில் இருப்பிடசான்று பெற்றவராக இருக்கவேண்டும்.
3. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் சான்று.
5. தமிழ்நாட்ழல் வசிப்பவர் என்பதற்கான நிரந்தரச் சான்று.
6. குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானச் சான்று.
7. குடும்ப உறுப்பினர்களின் வயது கல்வித் தகுதி மற்றும் வருமானச் சான்று.
8. ஒற்றைச் சாளரமுறைவழியாக சேர்க்கை பெற்றதற்கான சான்று.
9. இருப்பிடச் சான்று.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி பெற தகுதியற்றவர்கள்
1. நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்கள் நிதியுதவித் தொகை பெற இயலாது.
2. கல்வி உதவி பெறும் விவசாயிகளின் மகன்கள் மற்றும் மகள்கள்.
3. கல்வி உதவி பெறும் இறந்த அரசு பணியாளர்களின் மகன்கள் மற்றும் மகள்கள்.
4. கல்வி உதவி பெறும் பணியிலிருக்கும் இராணுவ வீரர்களின் மகன்கள் மற்றும் மகள்கள்.
5. கல்வி உதவி பெறும் முன்னாள் இராணுவ வீரர்களின் மகன்கள் மற்றும் மகள்கள்.
ஆகியோர்கள் இந்ததிட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற இயலாது.
மேலும், முதல் பட்டதாரி சலுகை பெற்றிருப்பினும், தொழிற்கல்வி பயில இயலாத மிகவும் வறியநிலையில் உள்ளவர்களுக்கு தொழில் கல்வி உதவித் தொகை வழங்க மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து சிறப்பினமாக கருதக் கோரும் கருத்துருக்கள் ஆய்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையால் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகை வழங்கப்பட்டுவருகிறது.
தொழிற் கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் அவர்களின் படிப்பினைத் தொடர முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவிப்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு கல்வியாண்டிலும் 200-ஆக உள்ள நிலையில் நமது வேலூர் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 10 கருத்துருக்கள் அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மிகவும் வறியநிலையில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் உதவித் தொகை சென்று சேரும் வகையில், அதுகுறித்த தகவல்களை தங்கள் கல்லூரியில் தொழிற்கல்வி (பொறியியல் / மருத்துவம்/ பி.எஸ்.சி (நர்சிங்) / சித்தாமருத்துவம்/ பல் மருத்துவம்/ கால்நடை மருத்துவம்/ வேளாண்மை/ சட்டம்) பயின்று வரும் மாணவ / மாணவியர்களுக்கு இந்த உதவித் தொகை குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி பயின்று வரும் மாணவர்கள் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்றும், ஆனால் அவர்கள் இந்த மாவட்டத்திலோ (அ) தமிழ்நாட்டில் வேறு மாவட்டத்திலோ பயின்று வந்தாலும், இந்த உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் என்பதால் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை பெற மாணவ-மாணவியர்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய ஆதாரங்களுடன், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “எ” பிளாக், முதல் தளத்தில் இயங்கிவரும் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), வேலூர் அவர்களது அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமராவேல் பண்டியன் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments