காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார் நடிகர் மன்சூர் அலிகான்
காஞ்சிபுரம்:
விவசாய நிலத்தை பாழ்படுத்தும் கல்குவாரி அரவை நிலையத்தை தடை செய்ய வேண்டும் என்றும், நஷ்டஈடாக 7 கோடி ரூபாய் தரக் கோரி அறிவுறுத்த வேண்டும் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் காலை 10 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர்.
அவ்வகையில் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தனது குறைகளை மனுவாக எழுதி விரைவில் தீர்வு காண கோரிக்கை விடுத்தார்.
அந்த மனுவில், தனக்கு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் கிராமத்தில் 10 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை பூமி உள்ளது. இந்த நிலத்திற்கு தற்போது வரை முறையான வரிகட்டி வருகிறேன். தனது நிலத்தில் 800க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளது.
தனது நிலத்தை ஒட்டி கடந்த 24 வருடங்களாக கல்குவாரி அரவை நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன் கழிவுகள் தனது நிலத்தில் பாய்ந்து விவசாய நிலத்தை சீரழித்து விட்டது.
நிலத்தில் மாசு படிந்து சேதமடைந்ததற்கு நஷ்ட ஈடாக ரூ. 5 கோடி, மற்றும் அந்த மாசுகளை அகற்ற ரூ. 2 கோடி என ரூ.7 கோடி பெற்றுத்தர வேண்டும் எனவும் உடனடியாக விவசாய நிலப் பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல் அப்பகுதியில் உள்ள குடிநீர் ஆதாரமான ஏரிகளையும் கழிவுகள் கலந்து ஏரியை மாசுபடுத்தி வருவதாகவும், உடனடியாக சுற்றுச்சூழலை காக்கும் வகையில் அப்பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளை மூடி பொதுமக்களை காக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்த போது, தங்களை அலைபேசியில் பலமுறை அழைத்தும் தாங்கள் ஒரு முறை கூட அலைபேசியை எடுக்கவில்லை என வருத்தத்துடன் அவரிடம் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments