29-04-2022 அன்று விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் அறிவிப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஏப்ரல் 2022 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 29.04.2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் பிரதான் மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தில் இணையவழி பதிவுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன் கலந்து கொண்டு பதிவு செய்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1. ஆதார் அட்டை - நகல்
2. சிட்டா, அடங்கல் - நகல்
3. நில வரை படம் - நகல்
4. ரேஷன் கார்டு - நகல்
5. பாஸ்போட் சைஸ் போட்டோ - 1
6. இணையவழி சிறு / குறு விவசாய சான்று
7. வங்கி கணக்கு புத்தகம் - நகல்
8. நிலத்தின் பரப்பளவு - பட்டா நகல்
அரசு அறிவுரையின்படி, கோவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல் காண்பித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments