துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
துபாய் சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை விமான நிலையத்தில் அந்நாட்டிற்கான இந்திய துணைத்தூதர் அமன் பூரி உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக மு.க.ஸ்டாலின், இன்று தனி விமானம் மூலம் அரசு முறை பயணமாக, துபாய் சென்றடைந்தார். தமிழகத்திற்கு புதிய முதலீட்டுகளை ஈர்க்கும் பொருட்டு இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
துபாயில் உலக கண்காட்சி, 2021 அக்.,1ல் துவங்கியது. இந்தக் கண்காட்சி இம்மாதம் 31ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கண்காட்சியில், தமிழக அரங்கில், நாளை முதல் 31ஆம் தேதி வரை, தமிழக வாரம் அனுசரிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரங்கை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார். அரங்கிற்கு வருவோர், தமிழகத்தின் அனைத்து சிறப்புகளையும், ஒரே இடத்தில் பார்வையிடும் அளவிற்கு, அரங்கம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
துபாய் சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை விமான நிலையத்தில் அந்நாட்டிற்கான இந்திய துணைத்தூதர் அமன் பூரி உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
துபாயில் வசிக்கும் தொழிலதிபர்களும், தமிழர்களும், முக்கிய பிரமுகர்களும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியாக உரையாடினார்.
இதையடுத்து, முதலமைச்சரின் பயணத்திற்காக துபாய் அரசு வழங்கிய பிஎம்டபிள்யூ வாகனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி புறப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் வழியனுப்பி வைத்தனர்.
No comments
Thank you for your comments