தாடை கிழிந்து வாயில் காயங்களுடன் மோசமான நிலையில் பெண் யானை..
கோவை:
கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட, வெள்ளபதி பிரிவு, முள்ளங்காடு சுற்றுப்பகுதியில், 8 முதல், 10 வயதுடைய, பெண் காட்டு யானை, வாயில் காயங்களுடன் சுற்றியது. தகவலறிந்த வனத்துறையினர், அதை கண்காணித்து வந்தனர்.
கோவை மாவட்ட வனத்துறை கால்நடை டாக்டர் சுகுமார், முதுமலை புலிகள் காப்பக டாக்டர் ராஜேஷ் குமார் மற்றும் ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர் மனோகரன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர், தாணிக்கண்டி வனப்பகுதியில், அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
யானை மூன்று வாரங்களுக்கு மேல் உணவு உட்கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பதால், உடல் மெலிந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
ஊசி மூலம் மருந்து மற்றும் உணவு வழங்கப்படுகிறது. மருத்துவக்குழு உதவியுடன் இரவும் பகலும் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், நேரில் வந்து, சிகிச்சை அளிக்கும் பணியை கண்காணித்தார். இப்பணியில், போளுவாம்பட்டி வனச்சரகர் சரவணன் மற்றும், 40க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதுகுறித்து டாக்டர் சுகுமார் கூறுகையில்,
''யானையின் இடது பக்க தாடை கிழிந்துள்ளது. நாக்கு, 95 சதவீதம் சிதைந்துள்ளது. இதனால், உணவு உட்கொள்ளாமல் இருந்திருக்கிறது.
வேறு யானையுடன் சண்டையிடும்போது, தந்தம் குத்தியதால் படுகாயம் அடைந்திருக்கலாம் அல்லது அவுட்டுக்காய் வெடித்து படுகாயம் ஏற்பட்டு இருக்கலாம்.
உண்மையான காரணம் கண்டறிய, ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்,'' என்றார்.
No comments
Thank you for your comments