ரதசப்தமி(Ratha Saptami) புண்ணிய ஸ்நான மகிமைகள்...சொல்ல வேண்டிய மந்திரங்கள்!
உலகிற்கு ஒளியை கொடுக்கும் கடவுளாகவும், நவகிரகங்களின் தலைவனாக செயல்படுபவர் சூரிய பகவான்.
வளர்பிறை, தேபிறை ஏழாம் நாள் சப்தமி திதி வருகின்றது. தை மாதத்தில் வரும் வளர்பிறை ஏழாம் நாள் வரும் சப்தமி திதியை ரத சப்தமி திதி என கொண்டாடப்படுகின்றது.
சூரியன் தன் பயணத்தின் திசையை முழுமையாக மாற்றும் நாள் ரத சப்தமி என்கின்றன சாஸ்திரங்கள்.
சப்தமி என்பது ஏழாம் நாள். ஒரு வாரத்தின் ஏழு நாள்களில் தலையாய நாள் ஞாயிறு. அதுவே முதல் நாள். கிழமை என்றால் உரிமை. ஞாயிற்றுக்கிழமை என்றால் சூரிய பகவானுக்கு உரிய நாள் என்பது பொருள். சூரிய பகவான் 7 குதிரைகள் பூட்டிய 12 சக்கரங்கள் கொண்ட ரதத்தில் சஞ்சாரம் செய்வதாக ஐதிகம். ஏழு குதிரைகளே ஒரு வாரத்தின் ஏழு நாள்கள் என்றும் 12 சக்கரங்களே 12 ராசிகள் என்றும் கூறுவர் ஞானிகள்.
சூரிய பகவான் ஒரு சப்தமி திதி அன்றுதான் காஷ்யபருக்கும் அதிதிக்கும் மகனாக அவதரித்ததாகச் சொல்கிறது புராணம். எனவே சப்தமி திதி என்பது சூரிய வழிபாட்டுக்கு உரியது. அதிலும் ரத சப்தமி சூரிய ஜெயந்தியாகவே போற்றப்படுகிறது. சப்தமி திதி அன்று செய்யப்படும் வழிபாடுகள் அனைத்தும் சூரிய பகவானுக்கு உகந்தவை.
எருக்க இலை மகிமை
மகாபாரத யுத்தத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் விழுந்தார். தான் விரும்பும் நாளில் மரணத்தை அடையும் வரம் பீஷ்மருக்கு இருந்தது. தன் பாவங்கள் தீருமட்டும் அம்புப் படுக்கையில் கிடக்க அவர் துணிந்தார்.
ரத சப்தமி நாளில் அவரை வியாசர் வந்து பார்த்தார். தன் பாவங்கள் நீங்கி முக்தி அடைய என்ன வழி என்று கேட்டார். அப்போது வியாசர் எருக்க இலைகளைக் கொண்டுவந்து பீஷ்மரின் மேனியில் வைத்து அவரின் வேதனையைத் தணித்தார்.
எருக்க இலை சூரிய பகவானுக்கு உரியது. சூரியனுக்கு அர்க்கன் என்ற திருநாமமும் உண்டு. எருக்க இலைக்கு அர்க்க பத்ரம் என்ற பெயரும் உண்டு. எருக்க இலையைப் பயன்படுத்தினால் சூரியபகவான் மனம் மகிழ்ந்து அருள்வார் என்கிறது சாஸ்திரம்.
ரத சப்தமி ஸ்நானம் செய்வது எப்படி?
மகாபாரதத்தில் தொடங்கிய இந்தச் செயல்பாடு இன்றுவரை நம்மிடையே தொடர்கிறது. ரத சப்தமி நாளில் ஏழு எருக்க இலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகாலையில் நீராடும்முன் மூன்று இலைகளைத் தலையிலும் இரண்டு இரண்டு இலைகளைத் தோள்களிலும் வைத்து ஸ்லோகங்களைச் சொல்லி நாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டி நீராட வேண்டும்.
ஆண்கள் இலைகளில் கொஞ்சம் விபூதியை இட்டும் பெண்கள் கொஞ்சம் மஞ்சள் பொடி இட்டு நீராடுவது சிறந்தது. இவ்வாறு நீராடினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
ரதசப்தமி அன்று பூஜை அறையில் சூரிய ரதக் கோலம் இடுவது விசேஷம். ரதக்கோலம் இடத் தெரியாதவர்கள் சாதாரணமாக வட்டங்களாக சூரிய சந்திரர்களை வரைந்துகொள்ள வேண்டும். சூரிய பகவானை நீராடியதும் தரிசனம் செய்து வேண்டிக்கொண்டு ஏதேனும் ஒரு நிவேதனம் செய்து வழிபட வேண்டும். சக்கரைப்பொங்கல் செய்து நிவேதனம் செய்வது விசேஷம். ஆதித்ய ஹிருதயம் கேட்பதோ அல்லது பாராயணம் செய்வதோ நல்லது.
பீஷ்மாஸ்டமி
ரத சப்தமிக்கு அடுத்த நாள் பீஷ்மாஸ்டமி. பீஷ்மர் முக்தி அடைந்த இந்த நாளில் நீர் நிலைகளுக்குச் சென்று புனித நீராடி தரிசனம் செய்வது நல்லது. அந்த நாளில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் விசேஷம் என்று சொல்லப்படுகிறது.
முன்வினைப் பாவங்கள் நீங்கும்
ரதசப்தமி நாளில் எருக்கம் இலைகொண்டு புனித நீராடுவதால் உடலில் இருக்கும் உஷ்ணம் தொடர்பான நோய்கள் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் சூரியன் ஆத்மகாரகன் என்பதால் சூரியபகவானை நினைத்துச் செய்யும் இந்த வேண்டுதல் நம் ஆன்மாவை சுத்தம் செய்யும். நம் முன்வினைப்பாவங்களை நீக்கும். பாவங்கள் நீங்கினால் வாழ்வில் துயரங்கள் விலகும். நன்மையும் மகிழ்வும் பெறுகும்.
விரத முறை:
ரத சப்தமி தினத்தில் அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து குளித்து பூஜைக்கு தயாராக வேண்டும். விரதமிருந்து, காலையில் தீபமேற்றி வழிபட வேண்டும்.
பொதுவாக நாம் காலையில் குளித்து சூரியனை வணங்குவதைப் போல் வணங்கி, அவருக்கு தீபாராதனை செய்ய வேண்டும்.
நீராடும்போடு சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்
ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம்ஹர ஸப்தமி
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி
தேவி, த்வாம் ஸப்த லோகைக மாதரம்
ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய!
ரதசப்தமி நாள் :
2022, பிப்ரவரி 7ம் தேதி 8:49 காலை முதல் பிப்ரவரி 8ம் தேதி காலை 10:00 வரை.
அரசு வேலை - அரசியல் பதவி
சூரியபகவானின் அருள் இருந்தால் அரசு வேலையும், அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கும் பதவிகளும் தேடி வரும். அரசு வேலை வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். எல்லோருக்கும் அரசு வேலையும் உயர்பதவியும் கிடைத்து விடாது. அரசு வேலைக்கும் சூரிய பகவானுக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. சூரிய ஜெயந்தி எனப்படும் ரத சப்தமி கொண்டாடப்படும் இந்த நாளில் விரதம் இருந்து சூரியனை வணங்க அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
No comments
Thank you for your comments