சுகாதாரத்துறை செயலாளருடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை
சென்னை:
தேர்தல் முடியும் வரை இப்போதுள்ள கட்டுப்பாடுகள் இருந்தால்தான் கொரோனா அதிகம் பரவாது. இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்று கருத்து பரிமாற்றம் நடந்ததாக தெரிகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளதால் மாநில தேர்தல் கமிஷன் வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வீடு வீடாக ஓட்டு கேட்க வேண்டுமானால் 3 பேருடன் தான் போக வேண்டும். அரங்கத்தில் பேச வேண்டும் என்றால் 100 பேர்தான் அமர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறி இருந்தது.
இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் பிரசார கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அமல் படுத்தலாமா? என்பது பற்றி ஆலோசிக்க மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கொரோனா பாதிப்பு குறித்து விரிவாக பேசப்பட்டது.
கவுன்சிலர் பதவிக்கு நிற்பவர்கள் வீடு வீடாக ஓட்டு கேட்க இருப்பதால் இப்போது உள்ள கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் மேற்கொண்டால் கூட்டம் அதிகமாகி கொரோனா பரவ வழிவகுத்துவிடும். எனவே இப்போது உள்ள கட்டுப்பாடுகள் நீடிப்பதே சரியாகும் என்று முடிவு செய்ததாக தெரிகிறது.
தேர்தல் முடியும் வரை இப்போதுள்ள கட்டுப்பாடுகள் இருந்தால்தான் கொரோனா அதிகம் பரவாது. இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்று கருத்து பரிமாற்றம் நடந்ததாக தெரிகிறது. எனவே கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
No comments
Thank you for your comments