இருளர் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையங்குளம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் உத்திரமேரூர் வட்டத்தைச் சேர்ந்த இருளர் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் 50க்கம் மேற்பட்ட அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 2.5 ஏக்கர் இடத்தை கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானமாகவும் பயன்படுத்தி வருகிறோம். அதுமட்டுமன்றி எங்கள் கிராம நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும், கோரிக்கை வைத்துள்ளோம்.
இவ்வாறு தரம் உயர்த்தப்படும் பட்சத்தில் அரசு இருளர் குடியிருப்பதாக ஒதுக்கப்பட்ட இடத்தில் பள்ளி கட்டிடங்களை அமைக்க ஊராட்சி மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது மற்றும் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் இங்கு தான் செயல்பட்டு வருகிறது.
இதன் மூலமாக எங்கள் கிராம மக்கள் மட்டுமன்றி அருகில் உள்ள 22 கிராம விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். எனவே தற்போது மேற்படி இடத்தை உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் இருளர் இன மக்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்காக பார்வையிட்டு வட்டாட்சியா் அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
எனவே எங்கள் கிராம நலனுக்காகவும் எதிர்கால சூழலை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்காகவும் மற்றும் விவசாயிகளுக்களுக்காகவும் இந்த இடத்தை எங்கள் கிராம மக்கள் பயன்பட்டிற்க்கு ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments