ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய 2 பேர் கைது... 22 கிலோ கஞ்சா பறிமுதல்
காஞ்சிபுரம்
ஆந்திராவிலிருந்து சென்னைக்கு காரில் கஞ்சா கடத்தி வந்த இருவரை காஞ்சிபுரம் அருகே கீழம்பி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் டிஎஸ்பி டில்லிபாபு மற்றும் ஆய்வாளர் வசந்தி ஆகியோர் தலைமையில் காஞ்சிபுரம் அருகே கீழம்பி கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த காரின் பின்புறத்தில் ரகசியமாக உருவாக்கப்பட்டிருந்த அறையில் 22 கிலோ கஞ்சா மூட்டை மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
போலீஸாரின் விசாரணையில் அவர்கள் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு காரில் கஞ்சா கடத்தி செல்வதும், தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த மகேஷ்வரன் என்ற பரோட்டா மகேஷ் மற்றும் உசிலம்பட்டி குமார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்ததுடன் அவர்கள் வைத்திருந்த 22 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியனவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
No comments
Thank you for your comments