வீட்டு வசதி வாரிய தலைவராக பூச்சி எஸ்.முருகன் நியமனம்- மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ்.முருகனை நியமித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“அனைவருக்கும் வீட்டுவசதி’’ என்ற குறிக்கோளை எய்தும் வகையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான மக்களுக்கும் வாங்கத்தக்க விலையில் வீடுகளின் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்களுக்காக பல்வேறு திட்டங்கள் வாயிலாக, லட்சக்கணக்கான மக்கள் வீட்டு உரிமையாளர்களாக வேண்டும் என்ற அவர்களுடைய கனவை நனவாக்கிய பெருமைக்குரியது.
அத்தகைய சிறப்புமிக்க தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ்.முருகனை நியமித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பூச்சி எஸ். முருகன் ஏற்கனவே திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், விளையாட்டு மேம்பாட்டுக்குழு உறுப்பினர், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளைக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments