Breaking News

பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக தலைவராக காஜா முகைதீன் நியமனம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக துறைமுகம் காஜா என்கிற காஜா முகைதீனை  நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், அறிவுச்சுடர் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வகுத்துத் தந்த சமூகநீதிப் பாதையில் நடைபோடும் இந்த அரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் முன்னேற்றத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. 

இச்சமூக மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, இவர்களது ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்கும் பல்வேறு நலத்திட்டங்களை பிற்படுத்தப்பட்டோர்,  மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வாயிலாக முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. 

இத்துறையின்கீழ் இயங்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த தனி நபர் மற்றும் குழுக்களுக்கு உதவிடும் வகையில் குறைந்த வட்டி விகிதத்தில், பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு, பல்வேறு கடனுதவித் திட்டங்களைச் செயல்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசின் ஓர் நிறுவனம் ஆகும். 

இக்கழகத்தின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்திடும் நோக்கில், அதன் தலைவராக துறைமுகம் காஜா என்கிற காஜா முகைதீன் அவர்களை நியமனம் செய்து  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்  22-1-2022 அன்று உத்தரவிட்டுள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments

Thank you for your comments