தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை ஆய்வாளர்களும் ஆய்வு
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை ஆய்வாளர்களும் ஆய்வு செய்தனர்.
ஈரோடு மற்றும் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை அழைத்து வர இயக்கப்படும் பேருந்துகள், மினி பேருந்துகள் மற்றும் வேன்கள் முதலிய வாகனங்களின் பாதுகாப்பு குறித்து கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளின் சார்பில் இயக்கப்படும் வாகனங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதா, ஏதேனும் விபத்து ஏற்பட்டால் மாணவர்கள் தப்பிப்பதற்கான போதுமான இடைவெளி உள்ள ஜன்னல் வைக்கப்பட்டுள்ளனவா, முதலுதவி பெட்டிகளில் தேவையான மருந்து பொருட்கள் உள்ளனவா, வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதா என்பவை குறித்தும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை குறித்தும் இந்த ஆய்வில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வாகன பதிவு எண்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எழுதப்பட்டுள்ளனவா, ஒளிரும் பட்டைகள் முறையாக ஒட்டப்பட்டுள்ளனவா,
தானியங்கி கதவுகள் சரியான முறையில் பொருத்தப்பட்டு இயங்குகின்றனவா என்பது குறித்தும் இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்டது .
சுமார் 600க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த ஆய்வின்போது பரிசோதிக்கப்பட்டன.
No comments
Thank you for your comments