கொரோனா கட்டுப்பாட்டால் மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து குறைவு
ஈரோடு:
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது...
ஈரோடு மாவட்டத்தில் கருங்கல்பாளையம் பகுதியில் வாராவாரம் வியாழக்கிழமையன்று மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த மாட்டுச் சந்தைக்கு தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மாடுகளை வாங்க வருவது வழக்கம். அதேபோல் உள்ளூர் வியாபாரிகளும் அதிக அளவில் வருவார்கள்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி வழக்கமாக டிசம்பர் இறுதி வாரத்திலிருந்தே சந்தைக்கு விற்பனைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிடும்.
மேலும் மாடுகளை வாங்குவதற்காக பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் சீசன் விற்பனை கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது.
அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த வாரம் அதிக அளவில் மாடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கொரோனா ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் மாடுகள் விற்பனை பாதிக்கப்பட்டது.
கடந்த வாரம் போல 600 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், 70 சதவீத மாடுகள் மட்டுமே விற்பனையானதாக மாட்டுசந்தை வியாபாரிகள் கூறியுள்ளனர்.
இது மாட்டுச்சந்தை வியாபாரிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments