மலைவாழ்பகுதி இளைஞர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கான இலவச இணைய வழி பயிற்சி
ஈரோடு, ஜன.14-
ஈரோடு மலைவாழ்பகுதி இளைஞர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கான இலவச இணைய வழி பயிற்சி வகுப்பினை அமைச்சர் சு.முத்துசாமி துவங்கி வைத்தார்...
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று (13.01.2022) ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மலைவாழ்பகுதி இளைஞர்களுக்கான போட்டித்தேர்வுகளுக்கான இலவச இணைய வழி பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் குறிஞ்சி.என்.சிவகுமார் முன்னிலையில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் இணையவழியில் துவங்கி வைத்தார்.
அதன் பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தில் தொடர்ச்சியாக போட்டி தேர்வுகளுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த இலவசப் பயிற்சி வகுப்பினை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் எழுத்தர் முதல் துணைஆட்சியர் வரையும், வங்கிகளில் எழுத்தர் மற்றும் புரோபேசனரி ஆபிஸர், காவல் துறையில் உதவி ஆய்வாளர் போன்ற அரசுப்பணிகளில் கடந்த ஐந்து வருடங்களில் 250-க்கும் மேற்பட்டோர் பணியில் சேர்ந்துள்ளனர். ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான 5000ற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் இணைய வசதியுடன் கூடிய இணைய நூலகம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்டத்தின் கடம்பூர், தாளவாடி, பர்கூர் ஆகிய மலைப்பிரதேசங்களில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனப்பெறும் வகையில் வேலைவாய்ப்பு அலுவலக வழிகாட்டும் மையம் கல்கடம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச இணைய வழி பயிற்சி வகுப்பு இணையவழியில் துவங்கி வைக்கப்பட்டது.
இந்த போட்டித் தேர்வுகளுக்கான இணைய வழி இலவச பயிற்சி வகுப்பானது, மலைவாழ் பகுதி இளைஞர்கள் தங்களின் வாழ்விடத்திலிருந்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில்
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் இன்று முதல் தொடர்ச்சியாக நடைபெறும். இப்பயிற்சி வகுப்புகள் கொரோனா நோய்தொற்றின் பரவல் காரணமாக தற்பொழுது இணையவழியிலும், பின்னர் நேரடியாகவும் நடத்தப்படும். இங்கு நடத்தப்படும் அனைத்து பயிற்சி வகுப்புகளும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. தொடர்ச்சியான எழுத்து தேர்வுகளும், நேர்முகத் தேர்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களும் மற்றும் கணிணி வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பினை இப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் பயன்படுத்திக் கொண்டு அரசு வேலைவாய்ப்பினைப் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, கல்கடம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளாச்சித்துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநர் ம.மகேஸ்வரி, கூடுதல் மாவட்ட தொழில்நுட்ப இயக்குநர் பி.சண்முகசுந்தரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொழில்நெறி வழிகாட்டும் பணி) டி.ஜோதி உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments