வேலூர் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு - டிஐஜி ஆனி விஜயா உறுதி
வேலூர், ஜன.20-
வேலூர் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என டி.ஐ.ஜி ஆனி விஜயா கூறினார்.
வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, வேலூரில் திடீர் ஆய்வு செய்தார். கோட்டை அருகே மக்கான் சிக்னல் பகுதியில் போக்குவரத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வடக்கு போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் போலீஸ் நிலையத்தில் உள்ள ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது, வேலூர் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆய்வு நடத்தி விரைவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும். வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு கட்டாயம் வார விடுமுறை அளிக்க வேண்டும்.ஆட்கள் பற்றாக்குறை எனக்கூறி வார விடுமுறை அளிக்காமல் இருக்கக்கூடாது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் டிஎஸ்பிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் போலீஸ் பற்றாக்குறை விரைவில் நிரப்பப்படும் என்றார். இதனைத் தொடர்ந்து வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டிஐஜி ஆனி விஜயா ஆய்வு செய்தார்.
வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிவந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பாகாயம் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
No comments
Thank you for your comments