Breaking News

தனிக்குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு, ஜன.24-

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வஉசி பூங்கா மற்றும் காந்திஜி சாலையில் 22.01.2022 அன்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நடைபெற்று வரும் ஊராட்சிக்கோட்டை தனிக்குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர்  ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது,

ஈரோடு மாநகராட்சிக்கு தனிக்குடிநீர்த் திட்டம் செயல்படுத்துவதற்காக ரூ.484.45 கோடிக்கு அரசானை  எண் 109, நாள் 29.08.2016-ல் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

இத்திட்டம், இடைக்கால (2032) மக்கள் தொகையின்படி 7.00 இலட்சம் மக்களுக்கு 114.75 மில்லியன் லிட்டர் குடிநீர், மற்றும் உச்சகட்ட (2047) மக்கள் தொகையின்படி 9.05 இலட்சம் மக்களுக்கு 147.69 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பவானி நகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள ஊராட்சிகோட்டை அருகில் உள்ள வரதநல்லூரில் காவிரி ஆற்றில் நீர் சேகரிப்பு கிணறு அமைத்து, அதிலிருந்து இயல்பு நீர் எடுக்கப்பட்டு, 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.  

சுத்திகரிக்கப்பட்ட நீர் 52.00 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டியிலிருந்து, 22.80 கி. மீ குழாய் மூலம் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சூரியம்பாளையம் மற்றும் வ.ஊ.சி பூங்கா ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள 42 இலட்சம் மற்றும் 118 இலட்சம் கொள்ளளவு தரைமட்ட தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.  

இவ்விரு தரைமட்ட தொட்டிகளிலிருந்து 79.683 கி.மீ கிளை நீருந்து குழாய் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள 21 மேல் நிலைத் தொட்டிகளுக்கும், நிலையிலுள்ள பழைய மேல் நிலைத் தொட்டிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. 

மேலும் 731.82 கி.மீ நீளமுள்ள பகிர்மான குழாய்களிலிருந்து 1,05,000 குடிநீர் வீட்டிணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும். தற்போது இத்திட்டம் சோதனை ஓட்டத்தில் உள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் ஈரோடு மாநகராட்சியைச் சார்ந்த மக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். 

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி செயற் பொறியாளார் டி.விஜயகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் பொன்னுசாமி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments