பெண் மீது ஆசிட் வீச்சு... மர்ம நபர் கைது
கோவை :
கோவை மாநகர் C2 பந்தய சாலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன் குளம் பகுதியில் குடியிருந்து கட்டட கூலிவேலை செய்து வரும் தருமபுரியைச் சேர்ந்த ஸ்டாலின் (வயது 40) என்பவரின் மனைவி ராதா (வயது 32) என்பவர் மீது யாரோ ஒரு மர்ம நபர் ஆசிட் வீசிய சம்பவம் குறித்து C2 பந்தய சாலை காவல் நிலைய குற்ற எண். 21/2022 u/s 294(b), 326(A) IPC யில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை மாநகர் காட்டூர் சரக காவல் உதவி ஆணையர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
இளங்கோவன் (வயது 59), த/பெ.சீனியப்பன் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவனின் மருமகன் சந்திரசேகர் (வயது 40), த/பெ மனோகரன், வள்ளலார் நகர், கோவை, என்பவரும் ஆசிட் வீசியதில் காயம்பட்ட ராதா என்பவரின் கணவர் ஸ்டாலின் என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து கொண்டு ஒரே இடத்தில் கட்டிட கூலி வேலை செய்து வந்ததுடன் குடும்ப நண்பர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்டாலின் என்பவருக்கும் அவரது மனைவி ராதா என்பவருக்கும் அவ்வப்போது சிறுசிறு குடும்பச் சண்டைகள் ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.
இதற்கிடையே சந்திரசேகர் தன் குடும்பத்தை சரியாக கவனிக்காமலும், குடும்பச் செலவிற்கு பணம் தராமலும் இருந்து வந்துள்ளார்.
சந்திரசேகர் என்பவர் ஸ்டாலின் மனைவி ராதாவுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர் சம்பாதிக்கும் பணத்தை ராதாவிற்கு செலவு செய்து வருவதாக இளங்கோவன் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் தனது மகளின் வாழ்வில் பிரச்சனை ஏற்படுகிறது, இதற்கு ராதாவே காரணம் என்று எண்ணியுள்ளார்.
தனது மகளின் வாழ்க்கை ராதா என்பவரால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என நினைத்து, ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு கடையில், கட்டிடத்தில் தேவையில்லாமல் வளர்ந்துள்ள மரங்களின் வேரில் ஊற்றி மரத்தை பட்டுபோக வைக்க ஆசிட் வேண்டும் எனக் கூறி ரூ.150/ கொடுத்து சல்பியூரிக் ஆசிட் வாங்கி, ராதா என்பவர் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று விட்டு திரும்பி வந்தவரை பின் தொடர்ந்து வந்து, ஆள்நடமாட்டம் இல்லாத பாப்பநாயக்கன் பாளையம், அம்மன்குளம் ரோட்டில் இரவு சுமார் 8.15 மணியளவில் அவரின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இவ்வழக்கில், இளங்கோவனின் ஒப்புதல் வாக்கு மூலத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேலும், இவ்வழக்கில் வேறு யாரேனும் சம்மந்தப்பட்டு உள்ளனரா என்பது குறித்து தொடர் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
No comments
Thank you for your comments