பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயன் பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்- மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி
ஈரோடு, ஜன.24-
ஈரோடு மாவட்டத்தில் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
பயிர்களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி விவசாயிகளை பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண்மை பயிர்களை பொருத்தவரையில், நடப்புரபி 2021-22 பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய, நெல்-3 (நவரை), மக்காச்சோளம்-3, நிலக்கடலை, கரும்பு மற்றும் எள் ஆகிய பயிர்கள் பெரிய அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்துக்கொள்ளலாம்.
நடப்புரபி 2021--22 பருவத்தில் நெல்-3 (நவரை) பயிருக்கு ஏக்கருக்கு ரூ.528-ம், மக்காச்சோளம்-3 பயிருக்கு ரூ.462-ம், நிலக்கடலை பயிருக்கு ரூ.466-ம், கரும்பு பயிருக்கு ரூ.2875-ம், எள் பயிருக்கு ரூ.206-ம் பிரிமியத் தொகையாக செலுத்த வேண்டும்.
மக்காச்சோளம்-3 மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு 31 ஜனவரி 2022ம், எள் பயிருக்கு 15 பிப்ரவரி 2022ம், நெல்-3(நவரை) பயிருக்கு15 மார்ச் 2022ம், கரும்பு பயிருக்கு 31 ஆகஸ்டு 2022ம் பிரிமியம் செலுத்த கடைசி நாளாகும்.
இத்திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.
கடன்பெற விவசாயிகள் நடப்புபசலி ஆண்டுக்கான அடங்கல் அல்லது பயிர் சாகுபடி சான்றினை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன், சிட்டா, வங்கிகணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய வங்கிகள் அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்துக்கொள்ளலாம்.
எனவே, இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் தவறாமல் முன் கூட்டியே பதிவு செய்து தங்கள் பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments