14 ஊராட்சி ஒன்றியங்களில் 7,106 ஏழை, எளிய பெண்களுக்கு திருமண நிதியுதவி
ஈரோடு :
வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி மற்றும் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், 744 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.6.03 கோடி மதிப்பீட்டில் தாலிக்கு தங்கத்துடன் திருமண நிதியுதவிகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வெங்கடேஷ்வரா திருமண மண்டபம், மொடக்குறிச்சி கிருஷ்ணா திருமண மண்டபம், கொடுமுடி ரம்யா மஹால், சென்னிமலை (வெள்ளோடு) அன்னமார் திருமண மண்டபம் ஆகியவற்றில் 11.01.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 744 பெண்களுக்கு ரூ.6.03 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவியுடன், தாலிக்கு தலா 8 கிராம் தங்கக்காசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் தெரிவித்ததாவது -
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் 10.01.2022 அன்று காணொலி காட்சி வாயிலாக, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.104.81 கோடி மதிப்பீட்டில் 66 முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.45.15 கோடி மதிப்பீட்டில் 365 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் 40,075 பயனாளிகளுக்கு ரூ.209.76 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி, அந்தியூர் மற்றும் வாணிப்புத்தூர் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 1030 மகளிருக்கு தாலிக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்துடன் திருமண நிதியுதவி வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இதுபோன்று காணொலி காட்சி வாயிலாக இந்தளவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் சார்பில், ஏழை, எளிய பெண்களுக்கான திருமண உதவி திட்டத்தின் கீழ் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் பட்டதாரி அல்லாத பெண்களுக்கு ரூ.25,000/“ நிதியுதவியும், பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000/- நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் பட்டப்படிப்பு பயின்ற 4,378 பெண்களுக்கும், பட்டதாரி அல்லாத 2,728 பெண்களுக்கும் என மொத்தம் 7,106 பெண்களுக்கு தாலிக்கு தங்கமாக தலா 8 கிராம் வீதம் 56,848 கிராம் (7,106 பவுன்) தங்க காசு ரூ.26,97,86,396/- மதிப்பீட்டிலும், திருமண நிதியுதவியாக ரூ.28,71,00,000/- மதிப்பீட்டிலும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 11.01.2022 பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் பட்டப்படிப்பு பயின்ற 153 பெண்களுக்கும், பட்டதாரி அல்லாத 81 பெண்களுக்கும், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் பட்டப்படிப்பு பயின்ற 173 பெண்களுக்கும், பட்டதாரி அல்லாத 70 பெண்களுக்கும், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் பட்டப்படிப்பு பயின்ற 149 பெண்களுக்கும், பட்டதாரி அல்லாத 41 பெண்களுக்கும், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் பட்டப்படிப்பு பயின்ற 63 பெண்களுக்கும், பட்டதாரி அல்லாத 14 பெண்களுக்கும் என மொத்தம் 744 பெண்களுக்கு ரூ.3,20,50,000/- மதிப்பீட்டில் திருமண நிதியுதவியும், ரூ.2,82,46,704/* மதிப்பீட்டில் தாலிக்கு தலா 8 கிராம் வீதம் 5,952 கிராம் தங்க காசுகளும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னிமலை (வெள்ளோடு) அன்னமார் திருமண மண்டபத்தில் 7 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை, ஒரு நபருக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இரண்டு புதிய புறநகர் பேருந்து நிலையங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஈரோடு-கரூர் சாலையில் மாநகரத்தின் தென்கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சோலார் என்ற இடத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையம் அமைக்க பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஈரோடு-சத்தி சாலையில் மாநகரகத்தின் வடமேற்கு எல்லையில் மற்றும் ஒரு புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தும்போது, ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சியானது நூறு சதவீதம் வளர்ச்சி பாதையில் செல்லும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதனால் தற்போது இருக்கும் வளர்ச்சியை விட 100 மடங்கு அதிகமாக இருக்கும். மேலும், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் விளையாட்டு துறையை ஊக்குவிக்கும்போது, பல்வேறு இளைஞர்கள் பயனடைகிறார்கள். எனவே இக்கல்லூரியின் விளையாட்டு துறையை மேம்படுத்தவும் மற்றும் இந்திய ஆட்சிப்பணி அகாடமி போன்றவை இக்கல்லூரியில் ஏற்படுத்தப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் நேரத்தின் போது அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளர்கள். அதில் குறிப்பாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மகளிருக்கு நகரப்பேருந்துகளில் இலவச பேருந்து பயண வசதியையும் ஏற்படுத்தி தந்துள்ளார்கள். இதேபோன்று தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் எஸ்.கணபதி (மொடக்குறிச்சி), காயத்திரி இளங்கோ (சென்னிமலை), மாவட்ட சமூக நல அலுவலர் ஐ.பூங்கோதை, மொடக்குறிச்சி, கொடுமுடி மற்றும் பெருந்துறை வட்டாட்சியர்கள் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments