இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய போலீஸார்!
கோவை, டிச.29-
கோவையில் கோவில் பூஜை நிகழ்ச்சியின்போது தகராறில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு 100 திருக்குறள்களை எழுத வைத்து போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.
மதுக்கரை அடுத்த மரப்பாலம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றுள்ளது. அங்கு வாசிக்கப்பட்ட மேளத்திற்கு உள்ளூர் இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில், 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் என்று கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுக்கரை போலீசார், இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். உதவி ஆய்வாளர் கவியரசன், இளைஞர்கள் ஒவ்வொருவரையும் தலா 100 திருக்குறள்களை எழுதி, படிக்க வைத்து மனப்பாடம் செய்ய சொல்லி நூதன தண்டனை வழங்கினார். இதையடுத்து இளைஞர்கள் அனைவரும் திருக்குறளை எழுதி காட்டியபின் அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
No comments
Thank you for your comments