Breaking News

வஉசி தியாகத்தை பறைசாற்றும் புகைப்படக் கண்காட்சி பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம்:

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் தியாகத்தை பறைசாற்றும் நகரும் புகைப்படக் கண்காட்சி பேருந்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா உரையில், முதல்வர் ஸ்டாலின், தியாகத்தின் திருவுருவான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.-யின் 150வது பிறந்த திருநாளை அரசு சார்பில் எழுச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தியாகசீலர் வ.உ.சி அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் பொதிந்துகிடக்கும் அரிய நிகழ்வுகளை வெளிக்கொணரும் வகையில் - காஞ்சிபுரம் மாவட்டத்தில்  உள்ள பள்ளி மாணவ, மாணவியர் அனைவரும் பார்வையிட்டுப் பயன்பெறும் நோக்கில் போக்குவரத்துத் துறையின் உதவியோடு உருவாக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சி பேருந்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நகரும் புகைப்படக் கண்காட்சி பேருந்தில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. 

குறும்படங்களும் திரையிடப்படவுள்ளது. இப்பேருந்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கும், வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவ, மாணவியர்கள் அறிந்து பயனடையும் விதமாக இன்று முதல் சனிக்கிழமை வரை ஆறு நாட்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள 21 பள்ளிகளில் இயக்கப்பட உள்ளது.

அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி, பள்ளி மாணவ மாணவியரும், பொதுமக்களும் , நகரும் புகைப்படக் கண்காட்சிப் பேருந்தினையும் பார்வையிட்டுப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments