பேரணாம்பட்டில் பூமிக்கு அடியில் சத்தம்... பெரும் அச்சத்தில் பொதுமக்கள்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு நகரில் குல்சார் வீதி, குட்டை மேடு, ஆமீனா வீதி, தரைக்காடு பகுதிகளில் நில அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த பகுதியில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பேரணாம்பட்டு நகரில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 29ம் தேதி அதிகாலை 4.17 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது என்றும் அது வேலூரில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் தெற்கு, தென் மேற்கு பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் அறிவித்தது. மேலும் இந்த நில அதிர்வு பூமிக்கு அடியில் 25 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
அதன்படி, ஆந்திர மாநில எல்லையை யொட்டி உள்ள மீனூர்மலை மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் பகுதியில் ஆந்திர எல்லையோர கிராமங்களில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பேரணாம்பட்டு நகரிலும், அருகில் உள்ள தரைக்காடு பகுதியிலும் நேற்று காலை 9.45 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இதை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்தனர்.
பேரணாம்பட்டு நகரில் குல்சார் வீதி, குட்டை மேடு, ஆமீனா வீதி, தரைக்காடு பகுதிகளில் நில அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த பகுதியில் 25க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிர்வு குறித்த அறிவிப்பு எதுவும் தேசிய நிலஅதிர்வு மையத்தில் இருந்து வெளியாகவில்லை.
வேலூர் ஆர்.டி.ஓ. ராமமூர்த்தி தலைமையில், வேலூர் விஐடி பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மை துறை பேராசிரியர் ஜி.பி.கணபதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பேரணாம்பட்டு பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போதே பூமிக்கடியில் சத்தத்துடன் கூடிய அதிர்வு ஏற்பட்டது.
இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் ஜி.பி.கணபதி கூறியதாவது:-
இங்கு நில அதிர்வு எப்படி ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆய்வின்போது 4, 5 வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதை பார்த்தோம். அருகில் உள்ள மலைகளின் நில அமைப்பில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்றும் பார்த்தோம்.
தொடர் மழையால் பூமிக்கடியில் உள்ள வெற்றிடங்களில் தண்ணீர் நிரம்பும்போது சில மாற்றங்கள் ஏற்படும். அந்த நேரத்தில் இதுபோன்ற சத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இருந்தாலும் புவியியல் வல்லுநர்களை வரவழைத்து ஆய்வு செய்யவுள்ளோம் என்றார்.
இந்த நிலையில் நள்ளிரவு 12.18 மற்றும் இன்று காலையில் 8.26 மணிக்கு பேரணாம்பட்டு, தரைக்காடு, குப்பமேடு, ரஹமத்துல்லா, எல்.ஆர்.நகர் பகுதியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீதிக்கு ஓடிவந்தனர். சேதம் ஏதும் ஏற்படவில்லை. பூமிக்கு அடியில் இருந்து சத்தம் கேட்பதாக பொதுமக்கள் கூறினர். மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
No comments
Thank you for your comments