கொடி நாள் தினத்தில் அதிகளவில் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்த மு.க.ஸ்டாலின்
சென்னை
இந்தியத் திருநாட்டின் புகழைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் கொடிநாள் டிசம்பர் 7ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கொடிநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடிநாள் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள கொடிநாள் செய்தியில் கூறி இருப்பதாவது:-
பெற்ற தாயையும், பெற்றெடுத்த செல்வங்களையும், உற்ற மனைவியையும், உறவினர்களையும் பிரிந்து, பிறந்த நாட்டின் பெருமை காத்திடும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தும் திருநாள் இக்கொடி நாளாகும்.
நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, கொட்டும் மழையிலும், குளிரிலும் நின்று தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது இந்தியத் திருநாட்டின் புகழைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றுவதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு நல்வாழ்வு அமைத்து தருதலும் நமது கடமையன்றோ!
அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிவீச கொடிநாளின் கொடி விற்பனைக்கு மனமுவந்து பெருமளவில் நிதி அளிப்போம். அந்த நிதி அவர்களின் குடும்பத்தினருக்குப் பல்வேறு வகையிலும் பயன் தரும்.
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் தன்னலம் கருதாத அந்தத் தியாக வீரர்களுக்கான கொடிநாள் நிதிக்குத் தொகை அளிப்பதில் தமிழ்நாடு எப்போதும் தனி இடத்தைப் பெற்று வருகிறது. எனவே, இவ்வாண்டும் பெரும் அளவில் நிதி வழங்கி முன்னாள் படைவீரர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நம் வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கை ஆக்குவோம்.
இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடிநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments