நலவிடுதிகளில் மாணவ மாணவியர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்...
ஈரோடு, டிச.2-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் மாணவ / மாணவியர்கள் சேர்க்கைக்கு தகுதியான மாணவ / மாணவியர் உடன் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
1). தமிழ்நாடு அரசால் ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் / சிறுபான்மை யினர் மாணவர் மற்றும் மாணவியருக்கெனக் கீழ்க்கண்டவாறு மொத்தம் 35விடுதிகள் செயல்பட்டுவருகின்றன.
அ. பள்ளி விடுதிகள்
மாணவர்களுக்கானது-16,
மாணவியருக்கானது-11
ஆ. கல்லூரி விடுதிகள்
மாணவர்களுக்கானது-4,
மாணவியருக்கானது-4
2) பள்ளிவிடுதிகளில் 4 முதல் 12ம் வகுப்புவரை பயில்கின்ற மாணவர் / மாணவியரும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவர் /மாணவியர் சேரத் தகுதியு உடையவர்கள் ஆவர்.
3) விடுதிகளில் பின்வரும் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
அனைத்து விடுதிமாணவ / மாணவியருக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.
10ஆம் வகுப்பு வரைபயிலும் மாணவ, மாணவியருக்கு 2 செட் பாலியெஸ்டர் காட்டன் சீருடைகள் வழங்கப்படும்.
10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புபயிலும் மாணவ / மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.
மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளிமேலாடைகள் வழங்கப்படும்.
4) விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்
பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.
இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்கவேண்டும். இந்த தூர விதி மாணவியருக்குப் பொருந்தாது.
5) தகுதியுடைய மாணவ / மாணவியர் விண்ணப் பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர் / காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
6) பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர், காப்பாளினியிடம்; 05.12.2021க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ மாணவியர் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் பின்னர் அளித்தால் போதுமானது.
7) மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கெனத் தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே மாணவ / மாணவியர் அரசின் இச்சலுகைகளைப் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
செ.வெ.எண்.07 / 01-12-2021
No comments
Thank you for your comments