தமிழக முதல்வரின் முகவரி துறை : கைப்பேசி வழியாக முடிக்கப்படும் கோரிக்கை மனுக்கள்
தருமபுரி:
தமிழக முதல்வரின் முகவரி துறைக்கு பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது கைப்பேசி வழியாக விசாரணை செய்து முடித்து வைக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர், தமிழக முதல்வரின் தனிப் பிரிவு உள்பட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை தீர்வு காண்பதற்காக, முதல்வரின் முகவரி துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதர இயக்கம், தமிழ்நாடு நகர்புற வாழ்வாதர இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு அரசு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு அனுப்படும் கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்துவதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
அதாவது, கைப்பேசி வழியாக நீங்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம் என்ன, உங்கள் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகின்றனராம்.
தமிழக முதல்வரின் முகவரி துறைக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அனுப்புகின்றனர்.
ஆனால், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு கிடைக்காமல், விசாரணை என்ற பெயரில் கைப்பேசி வழியாக விசாரணை செய்து எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் முடித்து வைக்கப்படுவதாக புகார் கூறுகின்றனர்.
எனவே, தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில், முதல்வரின் முகவரி துறைக்கு அனுப்பும் கோரிக்கை மனுக்கள் குறித்து, உரிய மனுதாரரிடம் நேரில் விசாரணை செய்து, கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
No comments
Thank you for your comments