அரசுகளின் திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்த ஊடகங்கள் முன் வரவேண்டும் .. மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுப்பு
வேலூர், டிச.28-
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், வேலூரில் ஊரக ஊடகவியலாளர் பயிலரங்கு நேற்று (27-12-2021) நடைபெற்றது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்த ஊடகங்கள் முன் வரவேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எம். அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த பயிலரங்கில் குடும்ப வன்முறைகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் முதியோர் உதவி எண் ஆகியவை குறித்த விழிப்புணர்வு பதாகைகள் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் பேசியதாவது,
அவர்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நிலவிய பல்வேறு ஏற்றத்தாழ்வுகளால் அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் இருந்ததாகவும், இதனை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டதன் மூலமாக இன்றைக்கு, அந்த ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஊடகங்களில் வெளியாகும் மக்கள் பிரச்சனைகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து நிவர்த்தி செய்து வருகிறது என தெரிவித்தார். மக்களின் தேவைகள் அறிந்து மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இதற்கு ஊடகங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பயனுறும் வகையில் 35 கிலோ இலவச அரிசி, பொங்கல் பரிசு தொகுப்பு, மாணவர்களுக்கு இலவச சீருடை, பயண அட்டை உள்பட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை ஊடகங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல ஊடகங்கள் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சி தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார். மேலும், அரசு அமைப்புகள் தங்களின் பணிகளை சிறப்பாக நிறைவேற்றும் வகையில் ஊடகங்கள் செயல்படுகின்றன எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் மா. அண்ணாதுரை பேசியதாவது,
மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டுவர வேண்டும் என்றார். மேலும், பிறப்பு முதல் இறப்பு வரை குறிப்பாக, திருமண உதவித்தொகை, கருவுற்ற பெண்களுக்கு உதவி, முதியோர் நலன் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் மத்திய அரசு வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது இதனை ஊடகங்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனக் தெரிவித்தார். இதுபோன்ற அரசு திட்டங்களை ஊரகப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஊடகங்கள் தெரியப்படுத்த வேண்டும். ஊடகங்கள் நாட்டை முன்னேற்றும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து அதன் இணை இயக்குநர் நதீம் துபைல் அவர்கள் விளக்கி பேசினார்.
இந்த பயிலரங்கத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜான் தியோடசியஸ், தேசிய சுகாதார இயக்கத்தின் வேலூர் மாவட்ட உதவி திட்ட மேலாளர் மரு. ராகேஷ் கருணாநிதி, சமூக நலத்துறை பாதுகாப்பு அலுவலர் திருமதி. நித்யா மற்றும் சமூக நலத்துறை அதிகாரி (முதியோர் நலன் புகார் உதவி எண்) சுந்தரமூர்த்தி ஆகியோர் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர். மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி, வேலூர் கள விளம்பர உதவி அலுவலர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments