மக்கள் குறைத் தீர் கூட்டம் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு
ஈரோடு, டிச.28-
ஈரோடு மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப்பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று (27.12.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 262 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பெற்று அதற்கு உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், தனிப்பிரிவு மனுக்களை, அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் துணை ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மை நல அலுவலர் ரங்கநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான் உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments