நூல்கள் சிந்தனை - நிலமும் பொழுதும்
நூல் பெயர்: நிலமும் பொழுதும் ( EARTH IS OLD AND TIME IS DEEP)
நூல் எழுத்தாளர் : நிர்மல்.
பதிப்பாளர் : எழுத்து பிரசுரம் ( www.zerodegreepublishing.com )
பக்கங்கள்: 210
வகை : அறிவியல்/கட்டுரை.
விலை : ரூ.100
தொ.எண் : 99404 46650
ஆசிரியர் குறிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கத்தாரில் பெட்ரோ கெமிக்கல் துறையில் பணிபுரிபவர். இவருடைய முதல் புத்தகம்.. காணாமல் போனதேசங்கள், அட்டைப்படத்தில், நாட்டிலஸ் -(Nautiluses) எனும் ஆழ்கடல் உயிரின வகை..பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் உயிருள்ள தொல்படிமம்.
நூல் குறிப்பு
சுற்றுச்சூழல் மீதான அக்கறை அதிகரிக்க தொடங்கியுள்ள இந்த வேளையில் பூமியின் வரலாறு குறித்து நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? என்று எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.
முன்னுரையில் இடம்பெற்ற மனிதர்களின் ஆளுமை காலம் (Anthropocene) என்ற ஒற்றை வார்த்தையும், பின் அட்டையில் உள்ள அட்டவணையும் இந்த நூல் நம் அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்குமா? நமக்கு புரியுமா? என்ற சந்தேகம் இருந்தது .
ஆனால், இந்த பேரண்டத்தில் உயிர்கள் வசிக்கும் ஒரே கோளான நம் பூமியின் தோற்றம் பற்றி ... ஓர் அனுபவம் மிக்க ஆசிரியர் "இதுவரை சொன்னதெல்லாம் புரிஞ்சதா? இப்ப அடுத்த பகுதிக்குப் போகலாமா? என்று கேட்டுத் தொடர்வதைப் போல நம்மை ஒவ்வொரு அத்தியாயமாக கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்.
அதற்கு அறிவியல் மட்டுமின்றி, கதைகளும், வரலாற்று நிகழ்வுகளும், இலக்கியமும் துணை நிற்கின்றன.
"ஞால முழுமைக்கும் ஒன்றாய் - எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை" - என்று 'குயில் பாட்டு' பாரதியை துணைக்கழைத்து, உயிரினங்களின் படைப்பு குறித்து உலகமெங்கும் உலாவிய 11 புராதானக்கதைகளை முதல் அத்தியாயத்தில் கூறுகிறார்.
இரண்டாம் அத்தியாயமான மறுமலர்ச்சியில் கான்ஸ்டாண்டின் நகரத்து வீழ்ச்சி என்ற முக்கிய வரலாற்று நிகழ்வோடு தொடங்குகிறார் கிமு 43 ஆண்டில் மார்க்கஸ் துல்லியஸ் சிசேரோ அவர்களின் படைப்புகள்.. ரோம் அரசின் தண்டனையால் விதைகளாக பூமியில் சிறிதுகாலம் மறைக்கப்படுகின்றன.
அச்சு இயந்திரம் என்ற அறிவியல் வளர்ச்சியால், நீரூற்றப்பட்டு.. 15 ஆம் நூற்றாண்டில் விருட்சமாக வளர்ந்து ஐரோப்பியர்களின் கைகளை வந்தடைகின்றன.. அவர் ஒரு ரோம் நகரத்து சங்ககாலப் புலவராம்.
studia humanitatis (“studies of humanity”) கல்வி முறைகள் தான் ஐரோப்பாவில் மனித மாண்புகளை கற்றுக்கொடுத்தது. மதங்களைத் தாண்டி சிந்திக்க வைத்தது.
தொல்லுயிர் படிமங்கள்.. பல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்து மறைந்த உயிரினங்களின் படிமம் . இதைப் பற்றி அறிவியல் பூர்வமாக நிரூபிப்பதற்கு முன் நமது மூதாதையர்கள் அவற்றைக் கதைகளாக மாற்றியிருக்கிறார்கள் .
தமிழ்நாட்டில் கோவில் சிற்பங்களில் உள்ள 'யாளிகளை' நமக்கு உதாரணமாகக் காட்டுகிறார் ஆசிரியர்.
சாளக்கிராமக் கற்களை தெய்வ சக்தியாக வணங்கி வருவதும் இந்த வகையில் தான்.. இறை நம்பிக்கையை வைத்து வணிகம் செய்யும் அரசியலையும் இங்கு விமர்சிக்கிறார் ஆசிரியர்.
நவீன அறிவியல் தொல்லுயிர் வடிவங்களுக்கான தெளிவை கொடுத்தவர் கிபி .17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மதகுரு நிகோலஸ் ஸ்டெனோ.
தொல்லுயிர் படிமங்கள் உருவானது எப்படி? என்பதற்கு வாழைக்காய் பஜ்ஜியை உதாரணமாகக் கூறுகிறார் ஆசிரியர். சிறப்பு..!
இந்த காலகட்டத்தில்தான் அறிவியல் மதங்களை விட்டு விலக ஆரம்பிக்கிறது. இதற்கு முதல் அடி எடுத்து வைத்தவர் கோபர்நிக்கஸ் எனும் அறிவியல் அறிஞர்.தொடர்ந்தவர் கலிலியோ ..
ஃபிரான்சிஸ் பேகான் (1561-1626) என்ற அறிவியலாளர், மனிதர்களின் நான்கு வகையான சிந்தனை குறைபாடுகளைப் பற்றி பட்டியலிடுகிறார் அந்தக் கருத்துக்கள் அனைத்தும் திருக்குறளில் #மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தின் கருத்துக்களோடு ஒன்றி இருப்பதை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.
அத்தியாயம் 7 - இரண்டாம் அடுக்கில் புதிய கதை... காலத்தைப் புரிந்துகொள்ள ஒரு சிறு விளக்கம் .. பல கோடி ஆண்டுகளைக் கொண்ட காலப் பிரிவுக்கு Eon-பெருங்காலம் என்ற பெயர் .
சில லட்சம் ஆண்டுகளைக் கொண்ட காலப் பிரிவுக்கு Era என்ற பெயர். ஆயிரம் ஆண்டுகள் வரை கொண்ட குறுங்காலப் பிரிவுக்கு Age என்ற பெயர். ஹேடியன், ஆர்க்கியான், புரோட்டரோசாயிக் இவை மூன்றும் (பெருங்காலங்கள்) சேர்ந்தது 400 கோடி வருடங்கள். மீதமுள்ளவை 60 கோடி ஆண்டுகள். இதனையும் மூன்று சகாப்தங்களாகப் பிரித்துள்ளார்கள்.
இதில் கடைசி மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான் மனிதர்கள் பூமியில் உருவாகி இருக்கிறார்கள்.
பூமி உருவாகி முதல் 400 கோடி ஆண்டுகளில் வாழ்ந்த உயிரினங்கள் மிகச் சிறியவையாகத் தான் இருந்துள்ளன.
ஐந்து முறை பேரழிவுகள் ஏற்பட்டு அதில் தப்பி சில சிறிய பாலூட்டிகள் மட்டும் பிழைத்துள்ளன. பூமியின் இரண்டு துருவங்களும் அப்போது பசுமைக் காடுகளாகவும் இருந்துள்ளன.
மனிதர்களின் ஆளுமைக் காலம்.. தலைப்பே சொல்கிறது விவரத்தை.. அறிவியலின் துணைக் கொண்டு மனிதன் தன் வசதிக்கேற்ப, நாகரீக வாழ்க்கைக்கு பூமியை ஆளுமை செய்த காலம்..
பூமியை வெப்பம் அடையச் செய்வது, ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது, சுற்றுச் சூழலை மாசுபடுத்துவது என இந்த பூமியில் ஏற்பட்டுள்ள அனைத்து சிக்கல்களுக்கும் காரணமான ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே .
அறிவில் சிறந்த நம்மால் எல்லா உயிர்களுக்கும் ஏற்ற உலகை உருவாக்க முடியாதா ? என்று காலம் வினா எழுப்புவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
இந்த புத்தகத்தின் அடிநாதமாக விளங்குவது இந்த கேள்வி தான்.. இயற்கையை விரும்பும், பிற உயிர்களையும் தன்னுயிர் போல் விரும்பும் மனிதர்களும் எழுப்புவது இந்த கேள்வியைத்தான்.
காலமும் மனிதனும் சரி செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன்...
🌍 💐 இந்த நூலைப் படைத்த ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள் ..
துணை நூற்பட்டியல், காணொளி இணைப்புகள் மிகச் சிறப்பு...
அனைவரும் படிக்கலாம் 👌
நூல் சிந்தனை கருத்தாளர் : சிந்து சீனு
வாரம்தோறும் நூல்சிந்தனை செய்யப்படும். ஒவ்வொரு நூளும் தலா இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.
நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி
காலச்சக்கரம் நாளிதழ்
#54, 3வது குறுக்குத் தெரு,
டிகேஎம் கல்லூரி பின்புறம்,
கணபதி நகர், வேலூர் - 632002
9360005566
No comments
Thank you for your comments