போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆயுட்கால சான்றிதழை பணிமனையிலேயே சமர்ப்பிக்கலாம்
சென்னை :
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், தாங்கள் கடைசியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற அலுவலகம் / பணிமனையிலேயே தங்களது ஆயுட்கால சான்றிதழை 2022 மார்ச் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், அ. அன்பு ஆபிரகாம் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு), மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை -02., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஏறத்தாழ 21,073 மேற்பட்ட பணியாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், ஏறத்தாழ 13,600க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்றுள்ளோர்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி நம்பகத்தின் வாயிலாக, ஓய்வூதியமானது வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுட்காலச் சான்றிதழை ஏற்கனவே, நடைமுறையில் உள்ளவாறு தாங்கள் கடைசியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற அலுவலகம் / பணிமனையிலேயே சமர்ப்பித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டிற்கான ஆயுட்காலச் சான்றிதழை, வரும் ஜனவரித் திங்கள் தொடங்கி, மார்ச் திங்கள் 15-ஆம் தேதிக்குள்ளாக, அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தலைமையகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தலைமையகத்திலும், பட்டுலாஸ்சாலை தொழிற்கூடத்தில் (PRD), மண்டல தொழிற்கூடத்தில் (RWS) ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், அந்ததந்த அலுவலகத்தில் ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கே.கே.நகர் பயணச்சீட்டு அச்சகத்தில் (K.K.Nagar Printing Press) ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் கே.கே.நகர் பணிமனையிலும்,
குரோம்பேட்டை பேருந்து கூடுகட்டும் பிரிவில் (Chrompet Workshop) ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் குரோம்பேட்டை-1 பணிமனையிலும் தங்களின் ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், விடுபட்டவர்கள் தலைமையலுவலகத்தினை அணுகி, தங்களின் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஓய்வூதியப் பிரிவு 044-2345 5801 - Extn. 268 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு), மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை -02. தகவல் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments