அரூரில் ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடக்கம்
அரூர்:
அரூர் பெரிய ஏரி ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை வருவாய் மற்றும் பொது பணித்துறையினர் மேற்கொண்டனர்.
தருமபுரி மாவட்டம், எச்.தொட்டம்பட்டி ஊராட்சியிலுள்ள அரூர் பெரிய ஏரி சுமார் 160 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியின் உபரிநீர் வெளியேறும் ராஜவாய்க்கால் அரூர் நகரின் மையப்பகுதி வழியாக செல்கிறது.
அரூர் பெரியார் நகர், பாட்சாபேட்டை, மஜீத்தெரு, தில்லை நகர், திரு.வி.க நகர், கோவிந்தசாமி நகர் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்லும் கிளை கால்வாய்கள் ராஜ வாய்க்காலில் இணைந்து வாணியாற்றில் சேருகிறது.
இந்நிலையில், அரூர் சேலம் பிரதான சாலையோரத்தில் ராஜ வாய்க்கால் மற்றும் நீர்வழிப்பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்களை கட்டியுள்ளனர். இதனால், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்குவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அரூர் பெரிய ஏரியின் ராஜ வாய்க்கால் செல்லும் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை கோட்டாட்சியர் வே.முத்தையன் அண்மையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், நில அளவையர்கள் மா.அசோகன், சு.முனிரத்தினம், கிராம நிர்வாக அலுவலர் செ.தீர்த்தகிரி, உதவிப் பொறியாளர் ஆர்.பிரபு உள்ளிட்ட அதிகாரிகள் ராஜ வாய்க்கல் அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து, பொக்லைன் எந்திரம் உதவியுடன் ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அற்றும் பணிகளை வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் செய்து வருகின்றனர்.
அரூர் பெரிய ஏரியின் ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொண்ட வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர்.
No comments
Thank you for your comments