Breaking News

"லுக்-அவுட்" நோட்டீஸால் தவிக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார்!

சென்னை: 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான செல்வராஜ் என்பவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்துள்ளார்.

அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்படலாம் என்பதை அறிந்து அவர் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

ஆனால் இந்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் ராஜேந்திரபாலாஜியை கைது செய்யலாம் என்று போலீசாருக்கு அனுமதி அளித்தது. இந்த தகவல் அறிந்தவுடன் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகி விட்டார். 

இந்நிலையில், 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை போலீசார் தேடி வருகின்றனர்.  தனிப்படை போலீசார் மதுரை, கோவை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  மேலும் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனாலும் ராஜேந்திர பாலாஜியின் இருப்பிடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தொடர்ந்து போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வருவதால் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருப்பதற்காக விமான நிலையங்களுக்கு போலீசார் "லுக்-அவுட்" நோட்டீசும் கொடுத்துள்ளார்.  இதனால் ராஜேந்திரபாலாஜி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான செல்வராஜ் என்பவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்துள்ளார்.

''அரசு பள்ளி ஒன்றில் ராஜேந்திரபாலாஜி மூலம் ஊழியர் வேலை வாங்கி தருவதாக கூறியதன் பேரில் எனது நண்பர்களான ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பரமகுரு, முத்துசாமி ஆகியோரின் மூலமாக திருச்சியில் பள்ளி நடத்தி வரும் ஒருவரிடம் ரூ.27 லட்சம் பேசி, ரூ. 11 லட்சம் கொடுத்தேன்.  ஆனால் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்து விட்டனர். ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரின் கூறியுள்ளார். 

இந்த புகாரின் மீதும் விசாரணை நடத்துமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து புகார்கள் பாய்வதால் ராஜேந்திர பாலாஜிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


No comments

Thank you for your comments