பொட்டாஷ் உரம் மூட்டைக்கு ரூ.660 உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு
சென்னை:
பொட்டாஷ் உரத்தேவையினை கருதி தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள பொட்டாஷ் உரத்தில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டன் கூடுதலாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் டிசம்பர் மாத உரத்தேவைக்கு ஒன்றிய அரசால் 94,650 மெ. டன் யூரியா, 24,100 மெ. டன் டிஏபி , 9,500 மெ. டன் பொட்டாஷ் மற்றும் 73,050 மெ. டன் காம்பளக்ஸ் உரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
23.11.2021 அன்று தேசிய அளவிலான காணொளி கருத்தரங்கில் மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு கிருஷ்ணாபட்டினம் மற்றும் காக்கிநாடா துறைமுகங்களிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள யூரியா, டிஏபி மற்றும் பொட்டாஷ் உரங்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்குமாறு வலியுறுத்தினார்.
மேலும் 8,000 மெ. டன் டிஏபி மற்றும் 10,000 மெ. டன் பொட்டாஷ் உரத்தினை கூடுதலாக ஒதுக்கீடு செய்யும்படி ஒன்றிய அரசின் மாண்புமிகு இரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து ஒன்றிய அரசிற்கு 24.11.2021 அன்று கடிதம் அனுப்பப்பட்டது .
அதற்கேற்ப ஒன்றிய அரசு 10,800 மெ. டன் ஐ.பி.எல் யூரியா உரத்தினை நியூமங்களுர் துறைமுகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்திற்கு கூடுதல் ஒதுக்கீடு செய்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட உரத்தினை கூட்டுறவு விற்பனை நிலையங்களில் உர நிறுவனங்கள் வழங்கிட மாவட்ட உர வழங்கல் திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி துறைமுகத்திற்கு 08.12.2021 அன்று சரக்கு கப்பலில் 36,000 மெ. டன் பொட்டாஷ் உரம் வந்தடைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்திற்கு 9,500 மெ. டன், பொட்டாஷ் உரத்தினை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. தற்சமயம் நிலவி வரும் பொட்டாஷ் உரத்தேவையினைக் கருதி தூத்துக்குடி துறைமுகத்தில் வந்தடைந்துள்ள பொட்டாஷ் உரத்திலிருந்து 20,000 மெ.டன் கூடுதலாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்படி, இதுநாள்வரை 840 மெ.டன் பொட்டாஷ் உரம் ஐபிஎல் நிறுவனத்தால் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மாவட்டங்களுக்கு சரக்கு லாரி வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பொட்டாஷ் உரத்தினை விரைவாக தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசு வருடந்தோறும் மானிய உரங்களுக்கு சத்துக்கள் அடிப்படையிலான மானிய கொள்கையினை பின்பற்றி மானியம் வழங்குகிறது.
2020-2021 ஆம் ஆண்டிற்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ள உரத்திற்கான மானியம்
தூத்துக்குடி துறைமுகத்தில் வந்தடைந்துள்ள பொட்டாஷ் உரத்தின் விற்பனை விலை மூட்டை ஒன்று ரூ. 1,700/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் புதியதாக வந்தடைந்துள்ள பொட்டாஷ் உரக்குவியலுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே இருப்பில் உள்ள 18,600 மெட்ரிக் டன் பொட்டாஷ் உர மூட்டையில் அச்சிடப்பட்டுள்ளபடி ரூ. 1040/- என்கிற விற்பனை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
ஏற்கனவே இருப்பில் உள்ள பொட்டாஷ் உர மூட்டைகள் ரூ. 1040/-க்கு விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்திட மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்சமயம் மாநிலத்தில் சம்பா பருவத்திற்குத் தேவையான 66,200 மெ. டன் யூரியா, 21,380 மெ. டன் டிஏபி, 16,780 மெ. டன் பொட்டாஷ் மற்றும்
1,34,140 மெ. டன் காம்பளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளன என்றும் விவசாயிகள் இவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் (PACB) பெற்று பயனடைய தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவல்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளன.
No comments
Thank you for your comments