Breaking News

சேலம் வணிகவரி கோட்டத்தில் ஜிஎஸ்டி தணிக்கையில் 6 வணிகர்களின் ரூ. 33.99 கோடி வரி ஏய்ப்பு...!

சேலம் :

சேலம்  வணிகவரி  கோட்டத்தில் உள்ள வணிகர்களின் இடங்களில் நடத்தப்பட்ட  ஜி.எஸ்.டி.  தணிக்கையில், 6 வணிகர்களின் 3 நிதியாண்டிற்கான கணக்குகளை தணிக்கை செய்ததில் ரூ. 33 கோடியே 99 இலட்சம்  அளவிற்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரியினை (GST) மறைப்பு  செய்து தவறாக திருப்புத்தொகை பெற்றது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் (TNGST Act, 2017 )  கீழ் வணிக வரித் துறையில்  வணிகர்களின்  கணக்குகளை  தணிக்கை  செய்யும் பணி வரிவிதிப்பு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் வணிகவரி கோட்டத்தில் உள்ள நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சார்ந்த வணிகர்களுள், 85 வணிகர்களின் கணக்குகளை  தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம், 2017 பிரிவு-65-இன் கீழ் தணிக்கை மேற்கொள்ள, கூடுதல் தலைமைச் செயலர்  /வணிக வரி ஆணையர் அவர்களால்  தேர்வு செய்யப்பட்டு,  ஒசூரில் உள்ள இரண்டு கிரானைட் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கடந்த 3 நிதியாண்டுகளுக்கான கணக்குகள் சேலம் கோட்ட வரிவிதிப்பு அலுவலர்களால் தணிக்கை செய்யப்பட்டது.

முதற்கட்ட தணிக்கையில், தவறாக ஏற்றுமதி திருப்புத்தொகை (Export Refund) பெற்று வரி மறைப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 3  நூல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கடந்த 3 நிதியாண்டுகளுக்கான கணக்குகள் சேலம் கோட்ட வரிவிதிப்பு அலுவலர்களால் தணிக்கை செய்யப்பட்டது. முதற்கட்ட தணிக்கையில், தவறாக  ஏற்றுமதி  திருப்புத்தொகை  (Export Refund)  பெற்று வரி  மறைப்பு  செய்ததும், தலைகீழ் வரிவிகிதத்தின்படி (Inverted Duty Structure) உள்ளீட்டு வரி வரவினை தவறாக ஈடு செய்து திருப்புத்தொகையாக பெற்று  வரி மறைப்பு செய்ததும்  கண்டுபிடிக்கப்பட்டது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு காலணி உற்பத்தியாளரின் கடந்த 3 நிதியாண்டுகளுக்கான கணக்குகள் சேலம் கோட்ட வரிவிதிப்பு அலுவலர்களால் தணிக்கை செய்யப்பட்டது.  முதற்கட்ட தணிக்கையில், தலைகீழ் வரிவிகிதத்தின்படி (Inverted Duty Structure) உள்ளீட்டு வரி வரவினை தவறாக திருப்புத்தொகையாக பெற்று  வரி மறைப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.


மேற்கண்ட 6 வணிகர்களின் 3 நிதியாண்டிற்கான கணக்குகளை தணிக்கை செய்ததில் ரூ. 33 கோடியே 99 இலட்சம்  அளவிற்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரியினை (GST) மறைப்பு  செய்து தவறாக திருப்புத்தொகை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மேலும், இத்தொகையினை வணிகர்களிடமிருந்து வசூல் செய்ய வரிவிதிப்பு அலுவலர்களால் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் கோட்டத்தில் மீதமுள்ள 79 வணிகர்களின் கணக்குகளானது வரிவிதிப்பு அலுவலர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.



No comments

Thank you for your comments