இன்று மத்திய அமைச்சரவையின் முக்கிய ஒப்புதல்கள் என்ன?
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை தொடர்வதற்கு அமைச்சரவை ஒப்புதல்
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை 2021-22 நிதியாண்டின் மீதமுள்ள பகுதியிலும், 2025-26 நிதியாண்டு வரையிலும் 15-வது நிதி ஆணையத்தின் காலகட்டம் வரை மறுசீரமைத்து தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் என்பது இந்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படும் மத்தியத் துறை திட்டமாகும். குடிநீர், ஆரம்பக் கல்வி, பொது சுகாதாரம், மற்றும் சாலைகள் உள்ளிட்டவற்றில் தங்கள் தொகுதிகளில் நீடித்து நிலைக்கும் சமுதாய சொத்துக்களை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வளர்ச்சிப் பணிகளை பரிந்துரைக்க உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ 5 கோடி வழங்கப்படும். இரண்டு தவணைகளாக தலா ரூ 2.5 கோடி வழங்கப்படும்.
கொவிட்-19-ஐ எதிர்கொள்ளும் பொருட்டு 2020 ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தாமல், அந்த நிதியை கொவிட்-19 மேலாண்மைக்கு பயன்படுத்திக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
நாடு தற்போது பொருளாதார மீட்சியை நோக்கி நடைபோடுவதால், இத்திட்டத்தை மறுசீரமைத்து 2021-22 நிதியாண்டின் மீதமுள்ள பகுதியிலும், 2025-26 நிதியாண்டு வரையிலும் 15-வது நிதி ஆணையத்தின் காலகட்டம் வரை தொடர அமைச்சரவை இன்று முடிவெடுத்துள்ளது.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
கவான் பிர்சா முண்டா பிறந்த நவம்பர் 15ம் தேதியை, ஜன்ஜாதிய கௌரவ் தினமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: ஒரு வாரம் கால கொண்டாட்டத்துக்கு திட்டம்
தீரமான பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறவும், நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகங்களை வருங்கால தலைமுறையினர் அறியவும் நவம்பர் 15ம் தேதியை, ஜன்ஜாதிய கௌரவ் தினமாக அறிவிக்க பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் சுதந்திர போராட்டம் சந்தால்கர்கள், தமார்கள், கோல் இனத்தவர், பில், காசி இனத்தவர் மற்றும் மிசோ இனத்தவர் உட்பட இன்னும் பல பழங்குடியின சமுதாயத்தினரால் வலுப்படுத்தப்பட்டது. இந்த பழங்குடி இனத்தவர்கள் நடத்திய புரட்சிகர இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள் அவர்களின் மகத்தான தைரியம் மற்றும் உன்னத தியாகத்தால் குறிக்கப்பட்டன. ஆங்கில ஆட்சிக்கு எதிரான, நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின இயக்கங்கள், நாட்டின் சுதந்திர போராட்டத்துடன் இணைப்பை ஏற்படுத்தி கொண்டு நாடு முழுவதும் இந்தியர்களை ஊக்குவித்தன. ஆனால், அந்த பழங்குடியின நாயகர்கள் பற்றி, பொது மக்கள் பலருக்கு தெரியாது. மாண்புமிகு பிரதமரின் 2016ம் ஆண்டு சுதந்திர தின உரையை தொடர்ந்து, நாடு முழுவதும் 10 பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களின் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
ஜன்ஜாதிய கௌரவ் தினம் அறிவிக்கப்பட்ட தேதி, திரு பிர்சா முண்டாவின் பிறந்த தினம். அவர் நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்களால் பகவான் என அழைக்கப்பட்டார். ஆங்கில காலனி முறையின் சுரண்டலுக்கு எதிராக பிர்சா முண்டா தைரியமாக போராடினார் மற்றும் ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக புரட்சிக்கு அழைப்பு விடுத்தார். இந்த அறிவிப்பு, பழங்குடியின சமுதாயத்தின் பெருமையான வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அங்கீகரிக்கிறது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் மற்றும் பழங்குடியின கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் முயற்சிகள் அங்கீகரிக்கப்படும். ராஞ்சியில் உள்ள பழங்குடியினர் சுதந்திர அருங்காட்சியகம் அமைக்கும் இடத்தில்தான் பிர்சா முண்டா இறந்தார். இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் திறந்து வைப்பார்.
பழங்குடியின மக்களில் 75 ஆண்டு வரலாறை நினைவு கூறும் வகையில் இந்தாண்டு நவம்பர் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஒருவார கால கொண்டாட்டத்துக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மாநில அரசுகளுடன் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள், பழங்குடியினரின் தனித்துவமான கலாச்சார பாரம்பரியம், சுதந்திர போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களால் எத்தனால் கொள்முதல் செய்வதற்கான வழிமுறைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் கரும்பு சார்ந்த பல்வேறு மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட எத்தனாலுக்கு அதிக விலையை நிர்ணயிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எத்தனால் விநியோக வருடம் 2020-21-க்கு (1 டிசம்பர் 2020 முதல் 30 நவம்பர் 2021 வரை) இது பொருந்தும்.
பின்வருவனவற்றிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது:
(i) சி ஹெவி மொலாசஸ் மூலமாக வரும் எத்தனாலின் விலையை லிட்டருக்கு ரூ 45.69-ல் இருந்து ரூ 46.66 ஆக உயர்த்துவது
(ii) பி ஹெவி மொலாசஸ் மூலமாக வரும் எத்தனாலின் விலையை லிட்டருக்கு ரூ 57.61-ல் இருந்து ரூ 59.08 ஆக உயர்த்துவது
(iii) கரும்புச்சாறு, சர்க்கரை/சர்க்கரை பாகு மூலமாக வரும் எத்தனாலின் விலை லிட்டருக்கு ரூ 62.65-ல் இருந்து ரூ 63.45 ஆக உயர்த்துவது
(iv) கூடுதலாக, ஜிஎஸ்டி மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களும் செலுத்தப்பட வேண்டும்
(v) நாட்டில் மேம்பட்ட உயிரி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு இது உதவும் என்பதால், 2ஜி எத்தனாலுக்கான விலையை நிர்ணயிக்கும் சுதந்திரத்தை எண்ணெய் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது. தானியங்களை அடிப்படையாகக் கொண்ட எத்தனால் விலைகள் தற்போது எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எத்தனால் சப்ளையர்களுக்கு விலை நிலைத்தன்மை மற்றும் லாபகரமான விலைகளை வழங்குவதில் அரசின் தொடர்ச்சியான கொள்கைக்கு இந்த ஒப்புதல் வலுவூட்டுவதோடு மட்டுமல்லாமல், கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை, கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்து இருத்தல் ஆகியவற்றை குறைப்பதோடு, சுற்றுச்சூழலுக்கு நன்மைகளையும் கொண்டு வரும்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
இந்திய பருத்தி ஆணையத்திற்கு (சிசிஐ) 2014-15 முதல் 2020-21 வரையிலான பருத்தி பருவங்களுக்கு ரூ.17,408.85 கோடி விலை ஆதரவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2014-15 முதல் 2020-21 வரையிலான பருத்தி பருவங்களுக்கு, இந்திய பருத்தி ஆணையத்திற்கு (சிசிஐ) ரூ.17,408.85 கோடிக்கான உறுதியான விலை ஆதரவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. (30.09.2021 வரை).
பருத்தி விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், பருத்தியின் விலை ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொள்வது பொருத்தமானது என்பதால், 2014-15 முதல் 2020-21 வரையிலான பருத்தி பருவங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அமலாக்கம், நாட்டின் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் பருத்தி விவசாயிகளை உள்ளடக்கிய தன்மையை மேம்படுத்துகிறது. விலை ஆதரவு நடவடிக்கைகள் பருத்தி விலையை நிலைப்படுத்தவும் விவசாயிகளின் துயரத்தைப் போக்கவும் உதவுகின்றன.
பருத்தி மிக முக்கியமான பணப்பயிர்களில் ஒன்றாகும் என்பதோடு, சுமார் 58 லட்சம் பருத்தி விவசாயிகள், பருத்தி பதப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் போன்ற பருத்தி தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 400 முதல் 500 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பருத்தி பருவம் 2020-21 இல், பருத்தி சாகுபடியின் பரப்பளவு 133 லட்சம் ஹெக்டேராக இருந்ததுடன், 360 லட்சம் பொதிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது மொத்த உலகளாவிய பருத்தி உற்பத்தியில் 25% ஆகும். விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்திய அரசு விதை பருத்திக்கு (கபாஸ்) குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்துள்ளது.
மத்திய அரசு, பருத்தி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தை, மத்திய நோடல் ஏஜென்சியாக நியமித்ததுடன், குறைந்தபட்ச ஆதரவு விலை மட்டத்திற்கு கீழே பருத்தி விலை குறையும் போது, அனைத்து நியாயமான சராசரி தரம் (FAQ) பருத்தியையும் விவசாயிகளிடமிருந்து எந்தவித தர அளவும் இல்லாமல் கொள்முதல் செய்வதன் மூலம், பருத்தியின் குறைந்தபட்ச ஆதரவு விலையை இந்திய பருத்தி கார்ப்பரேஷன் லிமிடெட் பொறுப்பேற்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை நடவடிக்கைகள் பருத்தி விவசாயிகளை எந்தவொரு துயரமான விலைச் சூழ்நிலையிலும் பாதகமான விற்பனையிலிருந்து பாதுகாக்கின்றன.
குறைந்தபட்ச ஆதரவு விலை செயல்பாடுகள், இயற்கையில் இறையாண்மையாக செயல்படுவதுடன், தற்சார்பு இந்தியாவுக்கு உதவி செய்யும் வகையில், நூற்புத் தொழிலுக்கான மூலப்பொருளான தரமான பருத்திக்காக, பருத்தி சாகுபடியில் அவர்களுடைய ஆர்வத்தை நிலையாக தக்கவைக்க, நாட்டின் பருத்தி விவசாயிகளை ஊக்குவிக்கிறது. பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், அதன் உள்கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருப்பதால், பருத்தி வளரும் பெரிய 11 மாநிலங்களில், 143 மாவட்டங்களில் 474 கொள்முதல் மையங்களைத் திறக்கிறது.
உலகளாவிய தொற்றுநோய் நெருக்கடி காலங்களில், கடந்த இரண்டு பருத்தி பருவங்களில் (2019-20 மற்றும் 2020-21), CCI நாட்டின் பருத்தி உற்பத்தியில் 1/3ல் அதாவது, சுமார் 200 லட்சம் பேல்களை கொள்முதல் செய்து ரூ.55,000/- கோடிக்கு மேல் 40 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைத்தது.
தற்போதைய பருத்தி பருவத்தில் அதாவது 2021-022, CCI ஆனது 11 பெரிய பருத்தி வளரும் மாநிலங்களிலும் 450 க்கும் மேற்பட்ட கொள்முதல் மையங்களில் மனித ஆற்றலைப் பயன்படுத்துதல் உட்பட, குறைந்தபட்ச ஆதரவு விலை நடவடிக்கைகளின் எந்தவொரு நிகழ்வையும் சந்திக்க போதுமான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்கனவே செய்துள்ளது.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
பேக்கேஜிங் செய்யப் பயன்படும் சணல் பொருட்கள் சட்டம் 1987-ன் கீழ், 2021-22 சணல் ஆண்டுக்கான ஒதுக்கீடு முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் 10, நவம்பர் 2021 அன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2021-22 சணல் ஆண்டில் (1, ஜூலை 2021 முதல் 30 ஜூன் 2022 வரை) பொருட்களை பேக்கேஜிங் செய்வதற்கு சணல் பைகளைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கும் ஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2021-22 சணல் ஆண்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கட்டாய பேக்கேஜிங் விதிமுறைகளின்படி, உணவு தானியங்களை 100%-ம் சர்க்கரையை 20% அளவிற்கும் கட்டாயம் சணல் பைகளில்தான் பேக்கேஜிங் செய்ய வேண்டும்.
இந்த ஒதுக்கீட்டு விதிமுறைகள் உள்நாட்டு கச்சா சணல் உற்பத்தி மற்றும் சணல் பேக்கேஜிங் பொருட்களின் நலனைப் பாதுகாக்க மேலும் உதவிகரமாக அமைவதோடு, தற்சார்பு இந்தியா கொள்கைக்கு ஏற்ப, இந்தியா தற்சார்பு அடையவும் வழிவகுக்கும். சணல் பேக்கேஜிங் பொருட்கள் ஒதுக்கீடு, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா சணலில் 66.57% பயன்படுத்துவதற்கு உதவிகரமாக அமையும். இந்தப் புதிய ஒதுக்கீடு முறை மூலம், சணல் ஆலைகள் மற்றும் அதனை சார்ந்த தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 0.37 மில்லியன் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் அளித்துள்ளது.
இந்தியாவின் தேசியப் பொருளாதாரத்தில் சணல் தொழில் முக்கிய இடம் வகிக்கிறது, குறிப்பாக கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, அசாம், திரிபுரா, மேகாலயா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மேற்கு வங்கத்தின் முக்கியத் தொழில்களில் ஒன்றாக, சணல் தொழில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உணவு தானியங்களை பேக்கேஜிங் செய்ய ஆண்டுதோறும் சுமார் ரூ.8,000 கோடி அளவிற்கு மத்திய அரசு சணல் சாக்குப் பைகளை கொள்முதல் செய்வதன் மூலம், சணல் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை உத்தரவாதம் கிடைக்கச் செய்வதுடன், தொழிலாளர்களுக்கும் வேலை உத்தரவாதத்தை அளித்து வருகிறது.
இவ்வாறு அமைச்சரவை முடிவுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார். உடன் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர், டாக்டர். எல். முருகன் மற்றும் முதன்மை இயக்குநர் ஜெனரல் (எம்&சி), பத்திரிகை தகவல் பணியகம், ஸ்ரீ ஜெய்தீப் பட்நாகர் ஆகியோரும் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.
Cabinet
Cabinet Committee on Economic Affairs (CCEA)
- Cabinet approves mechanism for procurement of ethanol by Public Sector Oil Marketing Companies under Ethanol Blended Petrol programme revised - ethanol price for supply to Public Sector OMCs for Ethanol Supply Year 2021-...
- Cabinet approves incurring expenditure for reimbursing the losses under MSP operations for cotton during the cotton season (October to September) 2014-15 to 2020-21
- Cabinet approves reservation norms for Jute Packaging Materials for Jute Year 2021-22 under JPM Act, 1987
No comments
Thank you for your comments