Breaking News

தி.நகரில் வெள்ள சேதம் ஏற்பட அரைகுறையான பணியே காரணம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை, நவ.11-

கடந்த அதிமுக ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் லஞ்சம் வாங்கி, ஊழல் செய்து, கமிஷன் பெற்று அரைகுறையாக பணிகளை செய்திருக்கிறார்கள். அதனால்தான் சென்னை தியாகராய நகரில் இவ்வளவு வெள்ள சேதம் ஏற்பட்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  10.11.2021 அன்று  மழை பாதித்த இடங்களை பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டபோது தெரிவித்துள்ளார். மேலும், மழைக்காலம் முடிந்த உடன், நிரந்தரமாக சேதாரம் இல்லாத சென்னையை உருவாக்குவோம் என முதலமைச்சர் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

சென்னை, தியாகராய நகரில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை  நான்காவது நாளாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு,  ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

கேள்வி:  தி.நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டீர்களே ஸ்மார்ட் சிட்டி திட்டம் எப்படி இருக்கிறது?

பதில்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் லஞ்சம் வாங்கி, ஊழல் செய்து, கமிஷன் பெற்று அரைகுறையாக பணிகளை செய்திருக்கிறார்கள். அதனால்தான் தி.நகரில் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது.

கேள்வி: விஜயராகவா ரோடில் நிவாரணப் பணிகளை பார்த்தீர்களே, எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது?

பதில்: மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். அதுதான் தற்போதைய சூழ்நிலை.

கேள்வி: மத்திய அரசிடம் நிவாரணம் எதுவும் கேட்டூள்ளீர்களா?

பதில்: இன்னும் இரண்டு நாட்கள் மழை இருக்கிறது என்கிறார்களே, அதையும் பார்த்துவிட்டுத்தானே நிவாரணம் கோரமுடியும்.

கேள்வி: மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், எந்த நோக்கத்தோடு, எந்தக் கொள்கையோடு, எந்த இலட்சியத்தோடு, ஆட்சிக்கு வந்தோமோ அதை நிச்சயமாக, அதே அடிப்படையில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய  பகுதிகளில் முதலில் முக்கியத்துவம் கொடுத்து, நாங்கள் நிவாரண நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம், தொடர்ந்து பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.

கேள்வி: கொட்டும் மழையில் ஆய்வு செய்கிறீர்கள், எப்படி?

பதில்: இது எனக்கு புதிதல்ல. நான் மேயராக இருந்தபோது செய்திருக்கிறேன், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் செய்திருக்கிறேன், துணை முதலமைச்சராக இருந்தபோதும் செய்திருக்கிறேன், இப்போது முதலமைச்சராக இருந்து செய்கிறேன்.

இந்த 10 வருடத்தில் கடந்த ஆட்சியில் எதுவுமே செய்யாத காரணத்தால்தான், நாங்கள் 6 மாதமாக, எப்போது ஆட்சிக்கு வந்தோமோ, அதிலிருந்து மழை பெய்து எங்கெங்கெல்லாம் அடைப்பு வரும் என்று எங்களுக்குத் தெரியும், அதையெல்லாம் சரிசெய்து கொண்டிருக்கிறோம். 50 சதவீதம், 60 சதவீதம் நாங்கள் செய்திருக்கிறோம், இன்னும் செய்யவேண்டியிருக்கிறது. அதை நாம் இந்த மழைக்காலம் முடிந்தவுடன் அதையும் செய்து நிரந்தரமாக, சேதாரம் இல்லாத சென்னையாக மாற்றுவோம்.

கேள்வி: நோய் பரவாமல் இருப்பதற்கு ...

பதில்: ஆங்காங்கு முகாம்களில் தங்கவைக்கப் பட்டவர்களுக்குக் கூட மருத்துவ முகாம்கள் அமைத்து, மருத்துவர்களை நியமித்து அந்தப் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

No comments

Thank you for your comments