வேகமாக நிரம்பும்வள்ளிமதுரை வரட்டாறு அணை... வெள்ள அபாய எச்சரிக்கை
அரூர், நவ. 10:
வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் கரையோரம் உள்ள தாதராவலசை, கௌப்பாறை, எல்லப்புடையாம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு உயரம் 34.45 அடியாகும். இந்த அணையின் நீளம் 1,360 மீட்டராகும். சித்தேரி மலைத் தொடரில் பெய்த கன மழையின் காரணமாக வள்ளிமதுரை வரட்டாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 31அடியாக உயர்ந்துள்ளது.
நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஓரிரு தினங்களில் வரட்டாறு அணை நிரம்பும் நிலையுள்ளது. வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பினால் தாதராவலசை, கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, முத்தானூர், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 30க்கும் அதிகமான ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்புவதுடன் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறும்.
வெள்ள அபாய எச்சரிக்கை :
வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் கரையோரம் உள்ள தாதராவலசை, கௌப்பாறை, எல்லப்புடையாம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை :
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையின் மொத்த நீர்ப்பிடிப்பு உயரம் 65.27 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 64.29 அடியாக உள்ளது.
இந்த அணையில் இருந்து வினாடிக்கு 90 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரால் ஆலாபுரம் ஏரி, பறையப்பட்டிபுதூர் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியுள்ளன. தற்போது, தென்கரைக்கோட்டை ஏரிக்கு உபரிநீர் செல்வதாக என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments