மழைவெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க நாமக்கல் ஆட்சியர் வேண்டுகோள்!
நாமக்கல்:
காவிரி கரையோரத்தில் இருக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் காவிரிக்கரையோரப்பகுதிகள் அவ்வப்போது கனமழை காலங்களில் பெருத்த சேதங்களை சந்தித்து வருது இயல்பான நிகழ்வாகிவிட்டது. இந்த நிலையில் பயுல் மற்றும் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
வட கிழக்கு பருவமழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். திருமணிமுத்தாறு, காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் எவரும் உரிய பாதுகாப்பின்றி காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள், நீா்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல் போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது.
கொல்லிமலையில் உள்ள பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது. மலைப் பகுதிகள், மலையடிவாரத்தில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வாகனங்களில் செல்பவா்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். அபாயகரமான பகுதிகளில் நின்று கைப்பேசியில் செல்ஃபி எடுக்கக்கூடாது. நீா்நிலைகளில் குழந்தைகள் இறங்கிடாதவாறு பொதுமக்கள், பெற்றோா் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் மண் சுவரால் கட்டப்பட்டுள்ள வீடுகளில் சுவா் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். திருமணிமுத்தாறில் உள்ள தரைப்பாலங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால், பாலங்களை கடக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குறிப்பாக காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், தங்களுடைய முக்கிய ஆவணங்களை நெகிழி உறையில் போட்டு பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் அவசரகால உதவிக்கு 1077 மற்றும் 04286-281377 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தாலும் பல பகுதிகளில் திருமணிமுத்தாறின் தரைப்பாலங்களில் மக்கள் போதுமான பாதுகாப்பு வசதிகளின்றியே பயணிக்கின்றனர். ஆகவே, அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு எச்சரிக்கை பலகைகளை வைக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments