Breaking News

பள்ளிகளுக்கு பறந்த அவசர உத்தரவு என்ன...?

சென்னை:

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகார்களை மாணவிகளும், பெற்றோர்களும் தெரிவிக்கும் முறையை எளிதாக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

எல்லா இடத்திலும் உளவியல் ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில்  தெரிவித்ததாவது, 

அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 66 லட்சமாக இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 71 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

எந்தெந்த அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு அதிகம் தேவைப் படுகிறதோ? அதை செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வருகின்ற மாணவர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பம்.



பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகார்களை மாணவிகளும் பெற்றோர்களும், தெரிவிக்கும் முறையை எளிதாக்க திட்டமிட்டுள்ளோம். 

ஒவ்வொரு பள்ளியின் புகார் பலகையிலும் 14417, 1098 எண் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அருகில் உள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணையும் பதிவிட வேண்டும் என சொல்லி இருக்கிறோம். 

வெறும் புகார் எண் மட்டும் கொடுத்தால் போதாது உளவியல் ரீதியான கவுன்சிலிங் தேவைப்படுகிறது. எல்லா இடத்திலும் இதற்கென உளவியல் ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

14417 புகார் மையம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து  சென்னையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பது தான் அரசின் விருப்பம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மாணவிகள் யாராக இருந்தாலும் தயங்காமல் புகார் தெரிவிக்கலாம்.

தனியார் பள்ளிகளில் மாணவர்களை முழு கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது. அவ்வாறு வற்புறுத்தினால் புகார் தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

முன்னதாக,  சென்னை கோட்டூர்புரம் பேரறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் '14417' எனும் உதவி எண்ணை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும்,  பாலியல் புகார்கள் வந்தால் அதிக கவனம் கொண்டு மாணவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.



முன்னெடுக்கப்பட்ட ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கல்வி செயல்பாடுகளில் சிறப்பாகச் செயலாற்றிய மாவட்டங்களுக்குக் கூடுதலாக ரூ.1 கோடி ஊக்கத்தொகையினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார் .

இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments