ரேஷன் கடையில் முடிவடைகிறது இலவச அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் - மத்திய அரசு
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு ஏழைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மார்ச் 26ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண திட்டத்தை அறிவித்தார். இதன்மூலம் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மானிய விலை உணவு தானியத்துக்குமேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டும் இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட இத்திட்டம், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய உணவுத்துறை செயலாளர் சுதன்சு பாண்டே கூறுகையில், தற்போது பொருளாதாரம் மீண்டு வருகிறது. வெளிச்சந்தையில் தாராளமாக கிடைக்கும் அளவுக்கு உணவு தானியங்கள் புழக்கம் நன்றாக உள்ளது. எனவே நவம்பர் 30-ம் தேதிக்கு பிறகு இலவச உணவு தானியம் வழங்கும் பணி நீட்டிக்கப்படாது என தெரிவித்தார்.
No comments
Thank you for your comments