புதிதாக பணியில் சேரும் அரசு பணியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி-நிதியமைச்சர் பிடிஆர் துவக்கிவைத்தார்
சென்னை, நவ.30-
புதிதாக பணியில் சேரும் அரசு பணியாளர்களுக்கும், அடிப்படைப் பதவியிலிருந்து பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தின் மூலம் 41 பணி நாட்கள் கொண்ட அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக இந்த செயலாக்கத்திற்கு சென்னை மாவட்டம் தெரிவு செய்யப்பட்டு மொத்தம் 250 அரசு பணி பயிற்சியாளர்களுக்கு 29.11.2021 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை, அண்ணாநகர், ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில், தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (பிடிஆர்) பயிற்சியைத் தொடங்கிவைத்தார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:
புதிதாக பணியில் சேரும் பணியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படைப் பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் சட்டப் பேரவை விதி 110ன் கீழ் அறிவிக்கை வெளியிட்டதின் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிதாக பணியில் சேரும் அரசு பணியாளர்களுக்கும், அடிப்படைப் பதவியிலிருந்து பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தின் மூலம் 41 பணி நாட்கள் கொண்ட அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா நோய் தொற்று காரணமாக 17.03.2020 முதல் இந்த அடிப்படைப் பயிற்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்திற்கு மேல் நிலுவை ஏற்பட்டது. இந்த விவரம் அறிந்த தமிழக முதல்வர் அவர்கள் அனைத்து பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பயிற்சி வழங்கி தகுதிகாண்பருவம் பூர்த்தி செய்யப்பட வேண்டுமெனவும், இதன் மூலம் அவர்கள் பதவி உயர்விற்கு வழிவகுக்கும் என்ற நோக்கில் உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும் 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படை பயிற்சியினை வழங்கலாம் என சட்டப்பேரவை விதி 110ன் கீழ் அறிவிக்கை வெளியிட்டார்கள்.
அண்ணா நிர்வாகப் பணியாளர்கள் கல்லூரி, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் ஆகியவை பயிற்சி துறைத் தலைவர் அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பயிற்சி நிலையங்களாகும். இந்த பயிற்சி நிலையம் மூலம் இதுவரை 1,29,813 பயிற்சியாளர்களுக்கு பல்வேறு அணிகளாக பயிற்சி வழங்கப்பட்டு பதவி உயர்வு வழங்க ஆவண செய்யப்பட்டுள்ளது. இதில் துணை ஆட்சியர், கணக்கு அலுவலர், உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) ஆகிய பல்வேறு துறை அலுவலர்களைக் கொண்டு அலுவலக நடைமுறை, பணி நடைமுறை, பொதுமக்கள் தொடர்பு, கணக்கு, ஊரக வளர்ச்சி, கணினி, போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
தமிழக முதல்வரின் இந்த அறிவிக்கைக்கேற்ப உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு அதே பாடத்திட்டங்களைக் கொண்டு மாவட்ட அளவிளான பயிற்சியை நடத்துவதற்கு உரிய அரசாணை பெறப்பட்டு, அந்த அந்த மாவட்டங்களில் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர்களை ஒருங்கிணைப்பாளர்களைக் கொண்டு பல்வேறு துறை உயர் அலுவலர்களையும் இணைத்து அவர்களை சிறப்பு விரிவுரையாளர்களாக நியமனம் செய்யப்பட்டு ஒரு மாவட்டத்தில் அணிக்கு குறைந்த பட்சம் 250 பயிற்சியாளர்களை தேர்வு செய்யப்பட்டு பயிற்சி நடத்தப்பட உள்ளது. இந்தப் புதிய பயிற்சித் திட்டத்தின் மூலம் வருகைபுரிந்து பெண் பணியாளர்கள் விடுதியில் தங்காமல் வீட்டிலிருந்து தினமும் வருகைபுரிந்து வகுப்புகளில் கலந்து கொள்வதால் அவர்களுக்கு இல்லப்பணிகளையும் தொய்வின்றி கவனிக்க முடியும் என்பதால் இத்திட்டம் மகளிரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதன் முதற்கட்டமாக இந்த செயலாக்கத்திற்கு சென்னை மாவட்டம் தெரிவு செய்யப்பட்டு மொத்தம் 250 அரசு பணி பயிற்சியாளர்களுக்கு 29.11.2021 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை, அண்ணாநகர், ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களால் பயிற்சி தொடங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர்/பயிற்சி துறைத் தலைவர், முனைவர் வெ.இறையன்பு, மனித வள மேலாண்மைத் துறை அரசு செயலாளர் மைதிலி க. ராஜேந்திரன், சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர். ஜெ. விஜயாராணி, , கல்லூரி முதல்வர் முனைவர். அனிதா ராஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments