சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 5 வீடுகள் தரைமட்டம்
சேலம்:
சேலத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் அடுக்கு மாடி குயிருப்புகள் 5 வீடுகள் தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார், இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 குடும்பங்களை சேர்ந்த 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். 10 வயது சிறுமியும் பத்திரமாக மீட்கப்பட்டார்.
சேலம் மாநகரம் 57வது கோட்டத்திற்குட்பட்ட கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள தீயணைப்புத்துறை சிறப்பு நிலை அலுவலர் பத்மநாபன் என்பவர் வீட்டில் இன்று காலை கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து நேரிட்டது.
இதில் அவரது வீடு உள்பட அருகே இருந்த 5க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்தவுடன் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக விரைந்து மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் ராஜலட்சுமி என்ற 80 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 11 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் 10 வயது சிறுமி உள்பட மேலும் சிலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
எனவே பொக்லைன் வாகனத்தின் உதவியுடன் சுவரை துளையிட்டு இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
10 வயது சிறுமி பூஜாஸ்ரீயை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர்
விபத்து சம்பவம் குறித்து, அறிந்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், ஆணையர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி காவல் ஆணையர், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் நேரில் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments