பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்..!
விருதுநகர் :
விருதுநகர் அருகே பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டுமென ஊராட்சி நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியான என்.முக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வீரக்குடி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக 2019-2020 மாநில நிதிக்குழு மூலமாக ரூபாய்.9.91 லட்சம் மதிப்பீட்டில் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை பொதுமக்கள் பயன்பாடின்றி காட்சியளிக்கிறது.
பொதுமக்கள் குடிநீர் இன்றி தவித்து வருவதோடு, அதிக விலை கொடுத்து லாரி மற்றும் டிராக்டர் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments
Thank you for your comments