Breaking News

நகைக்கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து நகைகள் அபகரித்து ஓட்டம்... 24 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது

திருவள்ளூர்:

தங்க நகைகள் வாங்குவது போல் நடித்து  அபகரித்து ஓட்டம் பிடித்த ஆந்திர கொள்ளையர்களை 24 மணி நேரத்தில்  திருத்தணி போலீசார் கைது செய்தனர் 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரில் பரபரப்பாக காணப்படும் மா. பொ. சி. சாலை. சிண்டிகேட் வங்கி  அருகில்  அசோக் குமார் ஜெயின் என்பவர் சொந்தமாக தங்க நகைக்கடை வைத்துள்ளார். 

அவரது கடைக்கு நேற்று மாலை 8 மணி அளவில் தங்க தாலி சரடு வாங்குவதற்காக வாலிபர் ஒருவர் வந்துள்ளார். கடையில் இருந்த ஊழியர்களிடம் தாலி சரடுகளை காண்பிக்குமாறு கூறியுள்ளார். கடையில் இருந்த ஊழியர்கள் விதவிதமான மாடல்களை காட்டியுள்ளனர். அதில் திருப்தியில்லை எனக் கூறி வேறு மாடல்கள் இருந்தால் காட்டுங்கள் எனக் கூறியுள்ளார்.

கடையில் இருந்த ஊழியர் பக்கத்து கடைக்கு சென்று அங்கிருந்து புதிய ரகம் தாலி சரடுகளை கொண்டு வந்து காட்டியுள்ளார். அப்போது அந்த இளைஞர் டிரேவில் இருந்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு ஓடினார். கடைக்கு வெளியே ஓடிய வாலிபர் சாலையில் தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில்  தப்பிச்சென்றார். 

டிரேவில் இருந்து சுமார் 12 பவுன் தங்க தாலி சரடுகளை அந்த நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமராக்கள் நிறைந்த பகுதியில் நடைபெற்ற நூதன கொள்ளை சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில்  பரபரப்பை  ஏற்படுத்தியது.

இதனையடுத்து கடை உரிமையாளர் போலீசில் புகார் தெரிவித்தார்.  இச்சம்பவம் தொடர்பாக திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனித், காவல் ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர்  அப்பகுதியில் பொறுத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கொள்ளையர்களை ஆய்வு செய்தனர்.

அதில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி பகுதியைச் சேர்ந்த கங்காதரன்(24), சிக்கந்தர்(30) ஆகிய இருவரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீஸார் கொள்ளையர்களை விரைந்து கைது செய்து தங்க நகைகள் மீட்டனர். நகைக்கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து நகைகள் அபகரித்து ஓட்டம் பிடித்த கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த திருத்தணி காவல் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

No comments

Thank you for your comments